உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் (Chocolate) எது என்று கேட்டால், பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும் முதல் நாடு சுவிட்சர்லாந்தாகத்தான் இருக்கும். அதேபோல், உலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம் என்றாலே 'Swiss Watch' தான் உலகளாவிய அடையாளமாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கூட, கதாநாயகனும் கதாநாயகியும் டூயட் பாடுவதற்கு சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அந்த அளவிற்கு அழகான, வசதியான மற்றும் தரமான தயாரிப்புகளைத் தரும் நாடாக சுவிட்சர்லாந்து உலகப் புகழ்பெற்றிருக்கிறது. 'பூமியின் சொர்க்கம்' என்று பலராலும் வர்ணிக்கப்படும் இந்த நாடு, இன்று பார்ப்பதற்கு மிக உன்னதமான நிலையில் உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இந்த உலகம் கண்ட மிக ஏழ்மையான, வறுமை சாபமிட்ட நாடாக சுவிட்சர்லாந்து இருந்தது என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்று இத்தனை வசதிகளுடன் ஆடம்பரமாகத் திகழும் இந்த நாடு, ஒரு காலத்தில் உலக வரைபடத்தில் கண்டிப்பான தோல்வியைத் தழுவும் என்று கணிக்கப்பட்ட மிக ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக இருந்தது.
பொதுவாக, உலகிலுள்ள பணக்கார நாடுகள் எதனை எடுத்துக்கொண்டாலும், அவற்றின் வளர்ச்சிக்கு பின்னணியில் எண்ணெய், தங்கம், நிலக்கரி போன்ற ஏதேனும் ஒரு இயற்கை வளம் அல்லது வர்த்தக மையமாக மாறுவதற்கான சாதகமான சூழல் இருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணமாக, துபாயிடம் எண்ணெய் வளம் உள்ளது; ஆஸ்திரேலியாவிடம் இரும்புத் தாதுவும் தங்கமும் உள்ளன; ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமோ எண்ணெய், எரிவாயு, தங்கம் என இந்த உலகில் சாத்தியமான அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்துள்ளன. ஆனால், சுவிட்சர்லாந்தை நோக்கினால் அவரிடம் உண்மையிலேயே குறிப்பிடும்படி எதுவுமே இல்லை. நிலக்கரி, எண்ணெய், தங்கம் எனப் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடிய எந்தவொரு இயற்கை வளமும் அந்த மண்ணில் இல்லை.
அதுமட்டுமன்றி, சுவிட்சர்லாந்து என்பது ஆப்கானிஸ்தானைப் போல நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும் (Landlocked Country). ஆப்கானிஸ்தானைப் போலவே இவர்களுக்கும் கடல் வழியோ அல்லது பிரத்தியேகமான சர்வதேச வர்த்தகப் பாதைகளோ கிடையாது. நாட்டின் 75 சதவீத நிலப்பரப்பு மலைகளால் சூழப்பட்டிருப்பதால், அங்கு விவசாயம் செய்வதோ அல்லது நிலப்பகுதிகளை ஒன்றாக இணைப்பதோ மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அங்கு நிலவும் கடுமையான பனி காலநிலை காரணமாக, சொந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவைத் தங்களது சொந்தப் பயிர்கள் மூலம் உற்பத்தி செய்வதே சாத்தியமற்றதாக இருந்தது. சுவிஸ் நாட்டுச் சிறுவர்கள் வெறும் கூலி வேலை செய்வதற்காக அண்டை நாடான ஜெர்மனிக்கு நடந்து செல்லும் அளவிற்கு அங்கு வறுமை தாண்டவமாடியது.
இன்னும் சுருக்கமாகக் கூறின், 1816ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ் மக்கள் உணவுக்கு வழியின்றி, கடுமையான பசி பட்டினியால் வாடினர். உயிர் பிழைப்பதற்காக வெறும் புற்கள், பாசி மற்றும் மரப்பட்டைகளைச் சாப்பிட்டு வாழ வேண்டிய அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், அதற்கடுத்து வந்த 200 வருடங்களில் சுவிட்சர்லாந்து எவரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரப் புரட்சியைச் செய்து காட்டியது. அதன் விளைவாக, இன்று அதே நாடு உலகிலுள்ள மிக முக்கியமான பணக்கார நாடுகளுள் ஒன்றாக நிமிர்ந்து நிற்கிறது. இன்று உலகிலுள்ள ஒட்டுமொத்த தங்கத்தில் 70 சதவீதத்தை அவர்கள் மட்டுமே சுத்திகரிப்பு (Refine) செய்கிறார்கள்; ஒரு சொகுசு காரை விட அதிக விலையுள்ள கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார்கள். அவர்களின் தனிநபர் வருமானம் (Per Capita GDP), ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை விட ஒரு லட்சம் டாலர் அதிகமாக உள்ளது.
அப்படியாயின், எழக்கூடிய முக்கிய கேள்வி என்னவென்றால்: எந்தவொரு இயற்கை வளமும் இல்லாத, வறுமை சூழ்ந்த ஒரு நாடு எப்படி உலகிலேயே பணக்கார நாடாக மாறியது? பனிக்கட்டியால் மூடப்பட்ட பாறைகளின் மேல் நின்றுகொண்டு, மற்ற நாடுகளால் செய்ய முடியாத எந்த உத்தியை இந்த மக்கள் கையாண்டார்கள்?
இதற்கான பதில் 1850ஆம் ஆண்டு வரை பின்னோக்கிப் போகிறது. 'ஆல்பிரட் எஸ்ஷர்' (Alfred Escher) என்ற தொலைநோக்கு சிந்தனையாளர், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை பரவிக்கொண்டிருந்த ஒரு புதிய போக்கைக் (Trend) கூர்ந்து கவனித்தார். அதன் மூலம் ஒரு யதார்த்தத்தை அவர் உணர்ந்துகொண்டார். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் அனைத்தும் ரயில்வே என்ற அளப்பரிய கண்டுபிடிப்பின் மூலமே அந்த வளர்ச்சியை எட்டுகின்றன என்பதை அவர் கண்டறிந்தார். ஏனெனில், ரயில்வேயானது, போக்குவரத்துச் செலவை 95 சதவீதம் வரை குறைத்தது. இதனால், 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் தனது பொருட்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு சாதாரண விவசாயியால், 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைகளுக்கும் தனது பொருட்களைக் கொண்டு சேர்க்க முடிந்தது. சொல்லப்போனால், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரில் தக்காளி சோஸ் (Ketchup) மற்றும் குதிரைவாலி (Horseradish) போன்ற பொருட்களைப் போத்தல்களில் அடைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு விவசாயி, தனது தயாரிப்புகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க இந்த ரயில்வேயைப் பயன்படுத்தினார். அந்த நிறுவனம் இன்று 40 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகப் புகழ்பெற்ற 'கிராஃப்ட் ஹைன்ஸ்' (Kraft Heinz) நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதேபோன்று, அட்லாண்டாவின் ஒரு கிராமப்புறப் பகுதியில் ஒரு மருந்தாளுனர் (Pharmacist) ஒரு சிரப்பைக் (Syrup) கண்டுபிடித்தார். ரயில்வே கட்டமைப்பு இருந்த ஒரே காரணத்தினால், இன்று அந்த நிறுவனம் உலகமே அறியும் 'கொக்கா கோலா' (Coca-Cola) நிறுவனமாக வளர்ந்துள்ளது. இவ்வாறு ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி என அனைத்து நாடுகளும் ரயில்வேயைக் கொண்டு தங்களது பொருளாதாரச் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில், சுவிட்சர்லாந்து மக்கள் இன்னும் கைவண்டிகளையே தள்ளிக்கொண்டிருந்தனர். இந்த நிலையை மாற்ற, 1852ஆம் ஆண்டில் ஒரு தொலைநோக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதியாகவும் தொழிலதிபராகவும் திகழ்ந்த ஆல்பிரட் எஸ்ஷர், சுவிட்சர்லாந்தில் ரயில்வேயை உருவாக்குவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரயில்வே சட்டத்தை' நிறைவேற்றினார்.
ஆனால், அங்குதான் ஒரு பெரிய சவால் காத்திருந்தது. சுவிட்சர்லாந்திடம் நிலக்கரி இல்லை, அதிகமான இரும்பு இல்லை, ஏன், சமமான நிலப்பரப்பு கூட இல்லை. நாட்டின் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மலைகளாகவே இருந்தன. அவ்வாறாயின், சாத்தியமே இல்லாத இந்த உள்கட்டமைப்புத் திட்டத்தை அவர் எப்படிச் சாதித்தார்? அதற்காக, ஆல்பிரட் எஸ்ஷர் ஒரு வங்கியைத் தோற்றுவித்தார். அதனைத்தான் இன்று நாம் அனைவரும் 'கிரெடிட் சுவிஸ்' (Credit Suisse) என்று அழைக்கிறோம். ஆனால், பணமே இல்லாத ஒரு ஏழை நாட்டில் இவ்வளவு பெரிய மூலதனத்தை எப்படித் திரட்ட முடிந்தது?
அதற்காக எஸ்ஷர் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை வகுத்து, சுவிஸ் மக்களிடமிருந்தே மூலதனத்தைத் திரட்டினார். வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் வாங்குவதற்குப் பதிலாக, தனது வங்கியின் 3 மில்லியன் பங்குகளைப் (Shares) பொதுமக்களுக்கு வெளியிட்டார். இந்த முதலீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், பங்குகள் தேவைப்பட்ட அளவை விட 73 மடங்கு அதிகமாக வாங்கப்பட்டன (Oversubscribed). அவ்வாறுதான் எஸ்ஷருக்குத் தேவையான மூலதனம் கிடைத்தது. ஆனால், வெறும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பாலத்தை வடிவமைக்கவோ, சுரங்கத்தைத் தோண்டவோ, ரயில் பாதைகளை அமைக்கவோ முடியாதல்லவா? அதற்குத் தகுந்த மனித உழைப்பும், அறிவும் அவசியம். ஆனால், அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க எஸ்ஷர் இன்னொரு வியூகத்தைக் கையாண்டார்.
1848ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அரசியல் புரட்சிகள் வெடிக்க ஆரம்பித்தன. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி என அனைத்து இடங்களிலும் மக்கள் அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமை மற்றும் முடியாட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், இந்த இக்கட்டான காலகட்டத்தைப் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து, அதற்கு நேர்மாறான ஒரு கொள்கையை எடுத்தது. பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் ஒரு முற்போக்கான அரசியலமைப்பை அவர்கள் எழுதினர். இதன் காரணமாக, ஐரோப்பாவிலேயே மிகப்பாதுகாப்பான நாடாகச் சுவிட்சர்லாந்து மாறியது.
இதன் விளைவாக, ஐரோப்பா முழுவதும் இருந்த மிகச்சிறந்த அறிவாளிகளும், சிந்தனையாளர்களும், திறமையாளர்களும், தங்களது சொந்த நாடுகளில் பாதுகாப்பு இல்லாததால் சுவிட்சர்லாந்தை நோக்கி வரத் தொடங்கினர். அவ்வாறுதான் தனது கைது ஆணையில் இருந்து தப்பிக்க 'ரிச்சர்ட் வாக்னர்' (Richard Wagner) சூரிச் நகருக்கு வந்தார்; அங்குதான் அவர் மேற்கத்திய இசையையே புரட்டிப்போட்ட ஒபேராக்களை (Operas) எழுதினார். விளாடிமிர் லெனின் சூரிச் நகரத்திலுள்ள ஒரு நூலகத்தில் அமர்ந்துதான் தனது புரட்சிக்கான திட்டங்களை வகுத்தார். அந்த சூரிச் பல்கலைக்கழகம் எந்தளவிற்கு முற்போக்கானதாக இருந்தது என்றால், ஐரோப்பாவின் முதல் பெண் மருத்துவரை அந்தப் பல்கலைக்கழகமே உருவாக்கியுள்ளது. அதைவிட முக்கியமாக, உலகின் மிகச்சிறந்த பேராசிரியர்கள் பலர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கினர். சொல்லப்போனால், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உருவாக்கிய சூரிச் 'ஃபெடரல் பாலிடெக்னிக் பள்ளி' (Federal Polytechnic School in Zurich), இந்தத் திறமையாளர்களால் தான் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் மனிதவளப் (Talent) பற்றாக்குறை நீங்கியது. சுவிட்சர்லாந்து பணத்தைக் கொடுத்துத் திறமையாளர்களை வாங்கவில்லை; மாறாக, ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களுக்குப் புகலிடமும் பாதுகாப்பும் தந்தது, அவ்வளவுதான். இவ்வாறு எஸ்ஷரின் கைகளில் மூலதனமும் திறமையும் ஒன்றாக இணைந்தன.
இந்த வளங்களைக்கொண்டு அவர் சுவிட்சர்லாந்தின் முகவரியையே மாற்றிய இரண்டு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தினார். முதலாவதாக, சுவிட்சர்லாந்தின் அனைத்து மூலை முடுக்குகளையும் ரயில்வே மூலம் இணைத்தார். இன்று அவர்களின் உள்கட்டமைப்பு எந்தளவிற்குச் சிறந்து விளங்குகிறது என்றால், மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர ஆல்பைன் (Alpine) கிராமங்கள் வரை தண்டவாளங்களை அமைத்து, உலகிலேயே மிக அடர்த்தியான ரயில்வே வலையமைப்பைக் கொண்ட நாடாகச் சுவிட்சர்லாந்து திகழ்கிறது. நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதியைக் கூட அவர்கள் இணைத்துள்ளனர். இதனை அவர்கள் 1800-களிலேயே சாத்தியமாக்கிக் காட்டினர். ஆனால், இலங்கையில், கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த தண்டவாளங்களைக் கூட இன்னும் முழுமையாகச் சீரமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. ஆனால், இவர்களோ 200 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
அதன் பிறகு, சுவிட்சர்லாந்து இதைவிட ஒரு வியக்கத்தக்க உத்தியைக் கையாண்டது. சுவிட்சர்லாந்தின் வரைபடத்தை நோக்கினால், அதன் வடக்கே தொழில்துறையின் அரக்கனான (Industrial Giant) ஜெர்மனியும், தெற்கே மத்திய தரைக்கடலின் நுழைவாயிலாக விளங்கிய இத்தாலியும் அமைந்திருந்தன. இவ்விரு நாடுகளுக்கும் நடுவே சுவிட்சர்லாந்து அமைந்திருந்தாலும், அவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது 4 கிலோமீட்டர் உயரத்திற்குப் பரந்து விரிந்திருந்த ஆல்ப்ஸ் (Alps) மலைத்தொடர் தான். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக ஆல்ப்ஸ் மலை அவர்களுக்கு ஒரு சாபமாகவே இருந்தது. அதைக் கடந்து செல்வதற்கு இருந்த ஒரேயொரு வழி 'கோத்ஹார்ட் பாஸ்' (Gotthard Pass) என்ற பாதை மட்டுமே. அந்த பாதையில் கோவேறு கழுதைகளைப் பயன்படுத்திப் பொருட்களை மலையின் உச்சி வரை இழுத்துச் செல்ல வேண்டும். இப்பயணத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை தேவைப்பட்டதோடு, இப்பாதை கோடைகாலத்தில் வெறும் 5 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.
இந்த நிலையில், ஆல்பிரட் எஸ்ஷர் ஆல்ப்ஸ் மலையின் மையப்பகுதி வழியாக நேராக ஒரு ரயில்வே சுரங்கப்பாதையைத் தோண்ட முடிவு செய்தார். அதுமட்டுமன்றி, சுவிட்சர்லாந்தை ஒரு தவிர்க்க முடியாத நாடாக மாற்றப்போகும் இந்தச் சுரங்கப்பாதைத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க, தனது இரு அண்டை நாடுகளையும் அவர் சம்மதிக்க வைத்தார். இறுதியில், 10 ஆண்டுகாலத் தீவிர உழைப்பிற்குப் பிறகு, சூரிச்சிலிருந்து மிலான் நகருக்கான பயண நேரம் 3 நாட்களிலிருந்து வெறும் 8 மணி நேரமாகக் குறைந்தது. போக்குவரத்துச் செலவு 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்தது. இதன் காரணமாக, அந்தப் பாதை வழியாகச் சென்ற பொருட்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இது சுவிட்சர்லாந்தை ஐரோப்பாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக (Transit Country) மாற்றியது.
இன்று இந்த கோத்ஹார்ட் ரயில்வே பாதை நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளை இணைக்கிறது. இவ்வாறு, நிலத்தால் சூழப்பட்ட தங்களது புவியியல் பலவீனத்தை, ஐரோப்பாவின் வர்த்தக மையமாக உருமாற்றித் தங்களது பலமாக மாற்றிக்கொண்டது சுவிட்சர்லாந்து. இப்பகுதி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) GDPயில் 16 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது. இங்குதான் சுவிட்சர்லாந்தின் இரண்டாவது முக்கிய கட்டம் தொடங்குகிறது. உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறுவதற்கு, அவர்கள் 'பூஜ்ஜியச் செலவு உத்தி' (Zero-cost Strategy) என்ற புத்திசாலித்தனமான பொருளாதாரக் கொள்கையைப் பயன்படுத்தினர்.
அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எளிமையாகக் கூறின், தங்களிடம் இல்லாத பணத்தை விற்றார்கள், தங்களால் கண்டுபிடிக்கப்படாத மருந்துகளை விற்றார்கள், தங்களது மண்ணில் பயிரிட முடியாத சாக்லேட்டுகளையும் விற்றார்கள். உதாரணமாக, துபாயில் இன்று உலகளாவிய முதலீட்டு வணிகம் மிக வெற்றிகரமாக நடப்பதற்கு முக்கிய காரணம், துபாயின் ரியல் எஸ்டேட் விலைகள் உலகில் நிலவும் 'பயத்திற்கு நேர் விகிதத்தில்' (Directly Proportional) இருப்பதுதான். அதாவது, ரஷ்யா-உக்ரைன் போர் வெடிக்கும்போது, அந்த நாட்டு மக்கள் தங்களது பாதுகாப்பிற்காகப் பணத்தைத் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். சிரியா, லெபனான் அல்லது ஐரோப்பாவில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இதுவே நிகழ்கிறது. உலகில் எப்போதெல்லாம் பயமும் நிச்சயமற்ற தன்மையும் உருவாகிறதோ, அப்போதெல்லாம் துபாயின் சந்தை வளர்கிறது. ஏனெனில், அது பூமியின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்று மக்கள் எவ்வாறு பாதுகாப்பை விரும்புகிறார்களோ, அதேபோல அன்றைய காலகட்டத்திலும் மக்கள் தங்களது சொத்துக்களை எந்தவொரு அரசாங்கமோ, வருமான வரி அதிகாரியோ அல்லது எதிரி நாடுகளோ கண்டறிய முடியாதவாறு மறைத்து வைப்பதற்கான தனிஉரிமையை (Privacy) விரும்பினர். இதனை உணர்ந்த சுவிட்சர்லாந்து, 1934ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்பாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு சுவிஸ் வங்கிக் கணக்கு யாருக்குச் சொந்தமானது என்ற ரகசியத்தை எந்தவொரு வங்கியாளராவது வெளியே கூறினால், அது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜெர்மனியின் நாணயமான 'ஜெர்மன் மார்க்ஸ்' (German marks) மதிப்பு இழந்திருந்த வேளையில், உலகமே நம்பிய, தாராளமாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரே பண அலகாக 'சுவிஸ் பிராங்க்' (Swiss Franc) மட்டுமே இருந்தது. இதனால் ஹிட்லருக்குத் தனது போர் ஆயுதங்களை வாங்குவதற்குச் சுவிஸ் பிராங்க் தேவைப்பட்டது; அதற்கு அவர் சுவிட்சர்லாந்தைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
இதன் காரணமாக, நாசிப் படைகள் சுவிஸ் பிராங்குகளைப் பெறுவதற்காக டொன் கணக்கிலான தங்கத்தை சுவிட்சர்லாந்திற்கு விற்றன. அவ்வாறு நாசிக்களின் தங்கம் மூலம் சுவிஸ் வங்கிகள் தோராயமாக 1.2 பில்லியன் பிராங்க், அதாவது இன்றைய மதிப்பில் 2.5 பில்லியன் டாலர் அளவிலான மூலதனத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தன. இவ்வாறு இரண்டாம் உலகப் போரின்போது சுவிட்சர்லாந்து ஹிட்லரின் வங்கியாளராகச் செயல்பட்டது. ஆனால், இதற்கடுத்து அவர்கள் அதைவிட தந்திரமான ஒரு பொருளாதார உத்தியைக் கையாண்டனர். இன்று சுவிட்சர்லாந்து உலகின் முன்னணி மருந்துத் துறை மையமாக (Pharma Hub) விளங்குகிறது. ஆனால், எத்தகைய இரசாயன வளங்களோ, மூலப்பொருட்களோ இல்லாத ஒரு நாடு எப்படி மருந்துத் துறையின் மையமாக மாறியது?
அதற்கான பதில், அவர்களின் சட்டத்தில் இருந்த ஒரு சாதகமான ஓட்டை (Loophole) தான். 1800-களில் பிரான்ஸ் நாடு 'ஃபூக்சின்' (Fuchsine) என்ற லாபகரமான சாயத்திற்கு (Dye) காப்புரிமை (Patent Rights) பெற்றிருந்தது. பிரெஞ்சு காப்புரிமைச் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அங்குள்ள வேதியியலாளர்களால் அதனைத் தாராளமாகத் தயாரிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து, தங்களது நாட்டிற்குள் எந்தவொரு அறிவுசார் சொத்தையும் (Intellectual Property) அப்படியே நகலெடுப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது. அதாவது, உலகில் உள்ள எந்தவொரு ஃபார்முலாவையும் பிரதி செய்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வந்து, அங்கேயே தயாரித்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும், அந்தப் பணத்தைச் சுவிஸ் வங்கிகளிலேயே பாதுகாப்பாகச் சேமித்துக்கொள்ளவும் முடிந்தது. இதன் காரணமாக, உலகின் மிகச்சிறந்த வேதியியலாளர்கள் அனைவரும் சுவிட்சர்லாந்திற்கு இடம்பெயர்ந்தனர். சாயத் தொழிலில் தொடங்கிய அவர்களின் ஆராய்ச்சி மெல்ல மெல்ல மருந்துத் துறையாக உருவெடுத்தது. இன்று சுவிட்சர்லாந்து உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் 169 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.
அடுத்ததாக, சாக்லேட் தயாரிப்பு. சுவிட்சர்லாந்தின் புவியியல் சூழலில் 'கொக்கோ' (Cocoa) மரங்கள் வளர்வதே இல்லை. அப்படி இருந்தும் சுவிஸ் சாக்லேட் எவ்வாறு உலகின் ஆகச்சிறந்த தரக் குறியீடாக (Gold Standard) மாறியது? அதற்கு இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள் காரணமாயின.
1875-இல், 'டேனியல் பீட்டர்' (Daniel Peter) என்பவர் நீண்டகாலமாக இருந்த ஒரு சிக்கலுக்குத் தீர்வு கண்டார். மில்க் சாக்லேட் (Milk Chocolate) தயாரிப்பதற்காக, சுண்டுகாச்சிய பாலையும் (Condensed Milk) கொக்கோவையும் கெட்டுப்போகாதவாறு எவ்வாறு ஒன்றாகக் கலக்க வேண்டும் என்ற வித்தையை அவர் கண்டறிந்தார். இவரே இன்று நாம் அறியும் புகழ்பெற்ற 'நெஸ்லே' (Nestle) நிறுவனத்தின் ஆரம்பகாலப் பங்காளர்களுள் ஒருவராவார். அதன் பிறகு, 'ருடால்ஃப் லிண்ட்' (Rodolphe Lindt) என்பவர் 'கான்சிங்' (Conching) என்ற புதிய செயல்முறையைக் கண்டுபிடித்தார். இந்தச் செயல்முறையின் மூலமே கரடுமுரடான, கசப்பான சாக்லேட்டின் பதம் மாற்றப்பட்டு, நாவில் உருகும் மென்மையான சுவைமிக்க சாக்லேட்டாக உருமாறியது. இதுவே இன்று 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'லிண்ட்' (Lindt) சாக்லேட் நிறுவனமாக உலகை ஆளுகிறது.
இதே உத்தியைத்தான் அவர்கள் கைக்கடிகாரத் துறையிலும் பயன்படுத்தினர். தங்களின் கைகளில் இரும்பு, பித்தளை போன்ற மதிப்பில்லாத உலோகம் மட்டுமே இருந்த நிலையில், அதனைக்கொண்டு மிக நுணுக்கமான கைக்கடிகாரங்களை உருவாக்கி, அதனை பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிப் பொருளாக மாற்றினர். பிரிட்டிஷ் கடிகாரத் தயாரிப்பாளர்கள் பழைய முறைகளையே நம்பியிருந்தபோது, சுவிஸ் தயாரிப்பாளர்கள் சந்தையின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டனர். பிற்காலத்தில் ஜப்பானின் 'குவார்ட்ஸ் கைக்கடிகாரம்' (Quartz Watch) சந்தைக்கு வந்தபோது கூட, தங்களது உத்தியை மாற்றி, கைக்கடிகாரத்தை வெறும் நேரத்தைக் காட்டும் கருவியாகப் பார்க்காமல், ஒரு ஆடம்பர மற்றும் அழகுச் சாதனப் பொருளாக (Luxury Brand) உலகிற்கு சந்தைப்படுத்தினர். இதனால் 1900-களில் சுவிஸ் வாட்ச் என்பது அன்றைய காலகட்டத்தின் ஐபோன் போன்றதொரு அந்தஸ்தைப் பெற்றது.
இவ்வாறு, நாட்டை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் இணைத்ததன் மூலமும், முறையான பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தியதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள திறமையாளர்களை ஈர்த்ததன் மூலமும் சுவிட்சர்லாந்து உலகின் ஆகச்சிறந்த பணக்கார நாடாக உருவெடுத்தது. இந்த சுவிட்சர்லாந்தின் பொருளாதாரப் பயணத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் மாற்றியமைக்க வேண்டிய 3 மிக முக்கியமான பாடங்கள் உள்ளன:
1. தற்காலிக தீர்வுகளில் இருந்து நீண்டகால உள்கட்டமைப்பை நோக்கி நகர்தல்:
சுவிட்சர்லாந்திடம் எண்ணெய் இல்லை, தங்கம் இல்லை, எந்தவொரு பெரிய இயற்கை வளமும் இல்லை. அப்படி இருந்தும், அவர்கள் மலையைக் குடைந்து சர்வதேச வர்த்தகப் பாதையை அமைத்து முன்னேறியுள்ளனர். ஆனால், இலங்கையைச் சுற்றி நாலாபுறமும் கடல் இருந்தும், நாட்டிற்குள் எக்கச்சக்கமான இயற்கை வளங்களும் அழகும் இருந்தும், நம்மால் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்கான நீண்டகால உள்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி நாம் இன்னும் சிந்திக்கவில்லை. ஒரு தற்காலிக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் கூட, வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்க QR குறியீடு விநியோக முறை வேலை செய்யுமா என்று தற்காலிகத் தீர்வுகளைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வர்த்தகங்களும் சரி, கொள்கை முடிவுகளும் சரி, குறுகிய காலத் தேவைகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனவே தவிர, எதிர்காலத்திற்கான நிலையான, பிரம்மாண்டமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதாக இல்லை.
2. மனித மூலதனப் பாதுகாப்பும் 'மூளை வெளுப்பு' (Brain Drain) தடுப்பும்:
உள்கட்டமைப்பு வசதிகளும் முதலீடுகளும் இல்லாதபோது, புதிய வாய்ப்புகளும் திறமைக்கான களங்களும் சுருங்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நாட்டின் ஆகச்சிறந்த திறமையாளர்களும், படிப்பாளிகளும், படைப்பாளிகளும் தங்களது எதிர்காலம் கருதி வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 'மூளை வெளுப்பு' (Brain Drain) சூழல் இலங்கையில் தீவிரமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நெருக்கடி காலத்தில் உலகத் திறமையாளர்களைத் தன்பால் ஈர்த்து அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கியது. ஆனால், நாம் நமது சொந்த நாட்டுத் திறமையாளர்களையே தக்கவைக்க முடியாமல் இழந்து வருகிறோம். இந்த மனித மூலதன இழப்பைத் தடுக்காமல் நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
3. நிலையான மற்றும் தீர்க்கமான பொருளாதாரக் கொள்கைகள்:
சுவிட்சர்லாந்தைச் சுற்றி எத்தனை தடைகளும் புவியியல் பலவீனங்களும் இருந்தபோதிலும், அவை அனைத்தையும் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளாக மாற்றுவதற்கு அவர்கள் தங்களது பொருளாதாரக் கொள்கைகளையே முதன்மை ஆயுதமாகப் பயன்படுத்தினர். ஆனால் நமது நாட்டில், ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதற்குள் எண்ணற்ற விவாதங்களும் இழுபறிகளும் நீடிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சில ஆண்டுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது, முந்தைய திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு கோப்புகள் தூசு படிந்து புதைக்கப்படுகின்றன. நிலையான, நீண்டகாலப் பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதவரை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நாம் பெற முடியாது.
1850ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தும் இன்றைய இலங்கையைப் போலத்தான் இருந்தது—வறுமை சூழ்ந்த, முறையான தொடர்புகள் இல்லாத, திறமைகளை இழந்து நின்ற, அப்படியே ஸ்தம்பித்த ஒரு சாதாரண நாடு. ஆனால், அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி அமர்ந்திருக்கவில்லை; மாறாக, அவர்களின் ஒரு தலைமுறை, அடுத்த 200 வருடங்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு தீர்க்கமாக காய் நகர்த்தியது. அந்த நீண்டகாலப் பயணத்தில் அவர்கள் ஒரு நொடி கூட பின்வாங்கவில்லை.
இன்று நம்முன் உள்ள ஒரே கேள்வி இதுதான்... சாபங்களை வரமாக மாற்றிய சுவிட்சர்லாந்தின் பொருளாதாரப் பாதையைப் பின்பற்றி, தற்காலிகத் தீர்வுகளிலிருந்து விடுபட்டு, நிலையான நீண்டகாலப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களை நோக்கி நமது நாடும் பயணிக்கத் தயாராக உள்ளதா?
ஆக்கம்:- ச.துலாங்கன்.
