இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகும் குறைந்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு
"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்."
-மகாகவி பாரதியார்-
நூறு ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தினார். பெண்கள் கல்வி பெறுவதும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதும், நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பதும் ஒரு முன்னேற்றமான சமூகத்தின் அடையாளமாகும். ஆனால், இன்றைய இலங்கையின் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, நாட்டின் மொத்த மனித வளத்தில் பாதிக்கும் அதிகமானவர்களாக இருக்கும் பெண்களின் பொருளாதார பங்கேற்பு இன்னும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. குறிப்பாய், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது, இலங்கையின் உற்பத்தித்திறன், வருமான உருவாக்கம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பை அளவிடும் Women Peace and Security Index (WPS Index) 2025/2026 அறிக்கையின்படி, டென்மார்க் 0.94 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 0.28 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இலங்கை 0.70 புள்ளிகளுடன் 181 நாடுகளில் 77ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பெண்களின் நிலை சில துறைகளில் முன்னேற்றமடைந்திருந்தாலும், பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக இன்னும் பல தடைகள் இருப்பதை காட்டுகின்றது.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்கள் அல்லது மூலதனம் மட்டும் அல்ல. அந்த நாட்டின் மனித வளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதிலும் தங்கியுள்ளது. வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்கள் தொகை பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது உற்பத்தி அதிகரிக்கிறது, வருமானம் உருவாகிறது, வரி வருவாய் அதிகரிக்கிறது மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தொழிலாளர் படையில் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation Rate - FLFPR) என்பது, ஒரு நாட்டில் வேலை செய்யும் வயதில் உள்ள மொத்த பெண்களில், வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதைக் காட்டும் பொருளாதாரக் குறியீடு ஆகும்.
தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் கணிப்பின் படி இலங்கையில் 2024ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 29.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது, வேலை செய்யக்கூடிய 100 பெண்களில் சுமார் 30 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகின்றனர். மீதமுள்ள பெரும்பாலான பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. 2017ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2024ஆம் ஆண்டில் 29.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இலங்கையின் மனித மூலதனம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதற்கான காரணம் அவர்களிடம் திறமை அல்லது கல்வி இல்லாதது அல்ல. இலங்கையில் பெண்களின் கல்வி நிலை கடந்த பல ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், கல்வி பெற்ற பெண்களுக்குக் கூட வேலைவாய்ப்பில் சவால்கள் காணப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் பெண்களின் வேலையில்லா விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. அதேவேளை, ஆண்களின் வேலையில்லா விகிதம் 3 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், உயர்தரப் பரீட்சை அல்லது அதற்கு மேல் கல்வி பெற்ற பெண்களில் வேலையில்லா விகிதம் 10.3 சதவீதமாக உள்ளது. இது கல்வி மட்டுமே போதுமானது அல்ல, பெண்கள் வேலை சந்தையில் இணைவதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன பெண்களின் இந்தத் தொழிலாளர் பங்களிப்பு குறைந்தடைந்தமைக்கு பிரதானமான 3 விடயங்களை அடையாளம் கண்டுள்ளன:
ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகள்:
பெண்கள் தொழிலாளர் சந்தையில் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று வீட்டுப் பொறுப்புகளின் சமமற்ற பகிர்வு ஆகும். குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டுப் பணிகள், வயதான குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பணிகள் பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்படுகின்றன. இவை பொருளாதார ரீதியாக மதிப்புள்ள பணிகளாக இருந்தாலும், அவற்றுக்கு நேரடி வருமானம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, பல பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடர முடியாமல் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறுகின்றனர். இது ஒரு தனிநபர் பிரச்சினை மட்டும் அல்ல; நாட்டின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் பொருளாதார இழப்பாகும். ஆனால், டென்மார்க், சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளில், குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு வழங்கப்படுகிறது. இதனால் குழந்தை பராமரிப்புப் பொறுப்பு இருவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
குழந்தை பராமரிப்பு வசதிகளின் குறைபாடு:
பெண்கள் வேலைக்குச் செல்லும் முடிவில் குழந்தை பராமரிப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் தரமான மற்றும் குறைந்த செலவிலான குழந்தை பராமரிப்பு மையங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால், குழந்தை பெற்ற பின்னர் பல திறமையான பெண்கள் வேலைவாய்ப்பை விட்டுவிடுகின்றனர். மாறாக, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் அரசு ஆதரவுடன் குழந்தை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுவதால், பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் தொழில் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முடிகிறது.
பாதுகாப்பற்ற போக்குவரத்து:
பெண்கள் வேலைக்குச் செல்வதில் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாய் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டிய வேளைகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் காணப்படுகிறது. பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து மற்றும் பெண்களுக்கு ஏற்ற வேலை சூழல் இல்லாதது, பல பெண்களின் வேலைத் தேர்வுகளைக் குறைக்கிறது.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதால் ஏற்படும் மிகப்பெரிய விளைவு நாட்டின் உற்பத்தித் திறன் குறைவதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். பொருளாதாரத்தில் அதிகமான மக்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிக்கும். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 52 சதவீதம் உள்ளனர். 2024 மதிப்பீட்டின்படி இலங்கையின் மக்கள் தொகை சுமார் 21.9 மில்லியன் ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 11.4 மில்லியன் ஆகும். ஆனால், இவ்வளவு பெரிய மனித வளம் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகளின்படி, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க முடிந்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சுமார் 21 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் வேலைவாய்ப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றம் மட்டும் அல்ல, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு என்பதும் தெளிவாகிறது.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவையாவன: குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்; குறைந்த செலவில் தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் (இது பெண்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்); நவீன தொழில் சந்தைக்கு ஏற்ப நெகிழ்வான வேலை நேரம், தொலைதூர வேலை வாய்ப்புகள் போன்ற முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், குடும்பப் பொறுப்புகள் பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற பாரம்பரிய அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவது ஒரு சமூகப் பிரச்சினை மட்டும் அல்ல; அது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான பொருளாதாரச் சவாலாகும். பெண்கள் வேலைவாய்ப்பில் இணைந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்கும், வறுமை குறையும், மனித மூலதனம் மேம்படும் மற்றும் நாட்டின் உற்பத்தித்திறன் உயரும். மகாகவி பாரதியார் கண்ட கனவு போல, பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றால், அவர்களுக்குச் சமமான பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றம் என்பது ஒரு சமூக நீதிக்கான நடவடிக்கை மட்டும் அல்ல; அது இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை முதலீடாகும்.
ஆக்கம்:- ஹபிலாஷினி யோகேஷ்வரன்

