மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஊடகங்களில் முக்கியச் செய்தியாக (Breaking News) ஏதேனும் ஒரு புதிய தகவல் வந்தவண்ணமே உள்ளது. ஆனால் நாம்? போரின் ஆழமான பின்னணிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே, அச்சப்படத் தேவையில்லை என்றும் அடுத்த மாதம் வரை போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசாங்கம் உறுதியளித்த பின்னரும், எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று பதற்றத்துடன் எரிபொருளைக் கொள்வனவு (Panic Buying) செய்யத் தொடங்கிவிட்டோம்.
இந்த நெருக்கடிக்கெல்லாம் அடிப்படைப் பின்னணி என்னவென வினவினால், அணு ஆயுத உற்பத்தியும் அதனால் எழும் அச்சுறுத்தலுமே காரணங்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், இதற்கான உண்மையான காரணத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும். இதன் பின்னணியில் நுணுக்கமான அரசியலும் அதிகாரப் போட்டிகளும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த போரினால் ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சுருக்கமாக ஆராயவுள்ளோம்.
இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் உருவாகும்போது, உடனடியாக எரிபொருள் விலை உயரும் அல்லது தட்டுப்பாடு ஏற்படும் என்பதுதான் நம் அனைவரது முதல் எண்ணமாக இருக்கிறது. இதனால்தான் மக்கள் அச்சமடைந்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். இது கண்களுக்குத் புலப்படும் ஒரு நேரடிப் பாதிப்பாக இருந்தாலும், இதற்கு அப்பால் நாம் கவனிக்கத் தவறும் அல்லது மறந்துவிடும் சில முக்கியப் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன.
முதலாவதாக, அந்த நாடுகளில் பணிபுரியும் மக்களும், அதன் விளைவாகப் பாதிக்கப்படவுள்ள நமது வேலைவாய்ப்புச் சந்தையும் (Job Market). கிட்டத்தட்ட, 1 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் Gulf Cooperation Council (GCC) countriesகளில், அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் விபரங்கள் பின்வருமாறு:
| நாடு | பணியாளர்களின் எண்ணிக்கை |
|---|---|
| ஐக்கிய அரபு அமீரகம்(UAE) | 350,000 |
| சவூதி அரேபியா | 246,139 |
| குவைத் | 175,000 |
| கத்தார் | 140,000 |
| ஓமான் | 32,000 |
| ஜோர்டான் | 14,500 |
| பஹ்ரைன் | 13,130 |
இத்தனை பேரின் வாழ்வாதாரமும் உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அவர்களால் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittance) பெருமளவில் பாதிக்கப்படும். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பில் முக்கியமான எலும்பு தான் இந்த remittance பணம். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டிற்குள் வரும் பணம் வங்கிகளில் வெறும் இருப்பாக மட்டும் தங்கிவிடுவதில்லை; மாறாக, கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் அது பெரும் உதவியாக இருக்கின்றது. இந்தப் போர்ச் சூழல் நீடிக்குமாயின், இலங்கைக்குப் பணம் அனுப்புவதை விடத் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அங்குள்ளவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். இதன் விளைவாக, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நம்பியிருக்கும் இலங்கைக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அதேவேளை, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில், இலங்கையின் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் போர் காரணமாக, இனிவரும் காலங்களில் வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்லவிருப்போரின் பயணங்களும் தடைப்படக்கூடும். இவ்வாறு வேலைவாய்ப்புகள் சுருங்குவதால், இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், அங்கு பணிபுரியும் மக்கள் பாதுகாப்பு நிமித்தமாக மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அதனால் ஏற்படும் வருமான இழப்பையும், வேலையற்ற நிலையில் உள்வாங்கப்படும் அதிகப்படியான மக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கும்.
அடுத்ததாக, சுற்றுலாத்துறையில் (Tourism Industry) ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பார்ப்போம். சுற்றுலாத்துறையைத் தனது பிரதான வருமான ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு, இந்தப் போர்ச் சூழல் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மேலைத்தேயநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு துபாய் (Dubai), தோஹா (Doha) மற்றும் அபுதாபி (Abu Dhabi) போன்ற வளைகுடாப் பிராந்தியங்களே Transit points ஆக விளங்குகின்றன. அதேபோல், நாம் இலங்கையிலிருந்து மேலைத்தேயநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் மத்திய கிழக்குப் பகுதிகளையே Transit points ஆகப் பயன்படுத்துகின்றோம். எனவே, இந்தப் போர்க்கால நிலைமையால் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் எட்டிஹாட் (Etihad) போன்ற முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தமது பல விமானப் பயணங்களை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடும். ஏற்கனவே சில விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுற்றுலாத்துறை மட்டுமன்றி, தளவாடங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து (Logistics and Cargo transport) உள்ளிட்ட வான்வழிப் போக்குவரத்து மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்களையும் நாம் இழக்க நேரிடும். இது இறுதியில் இலங்கை ரூபாயின் ஸ்திரத்தன்மையிலும் (Stability) நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அடுத்ததாக, எமது வர்த்தக வருமானம் (Trade Income) பற்றிப் பார்ப்போம். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் மிக முக்கியமான நாடுகளாகத் திகழ்கின்றன. எனவே, இந்த யுத்தச் சூழலால் அந்த நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது (Market Collapse), அது எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். அத்துடன், இந்தப் பாதிப்பை ஈடுகட்ட நாம் புதிய சந்தைகளைத் தேட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாவோம். இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.
தற்போதைய சூழலில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடிவிட்டது; இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல்கள் வந்து சேராது, நாட்டில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகும் (வரிசை யுகம்), மின்சாரத் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு நாடு இருளில் மூழ்கும் மற்றும் பொருளாதாரம் சரிவடையும் என்றெல்லாம் செய்திகள் பரவுகின்றன.
மக்கள் மீண்டும் சொல்லொணாத் துயரங்களை விரும்பியோ விரும்பாமலோ அனுபவிக்கப் போகிறார்கள் எனும் செய்தியை ஒரு தரப்பினர் பரப்ப விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ, இவ்வாறான விபரீதங்கள் உண்மையாகவே நடந்துவிடுமோ என்று மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்றும், நாட்டில் பயன்பாட்டிற்கு ஒரு சொட்டு எரிபொருள் கூட எஞ்சியிருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெயின் பெரும்பகுதி ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் சிங்கப்பூர் அல்லது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனவே, தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் ஈரானுக்கு அருகிலுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாகவே எமது எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கட்டாயம் வர வேண்டும் என்பதில்லை. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் தற்போது போர்ச் சூழலுக்கு அப்பாற்பட்ட மாற்றுப் பயணப் பாதைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஒருவேளை போர் மூண்டாலும் எரிபொருள் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரையான அளவு ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே நடைபெறுகின்றது; குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகம் இந்தப் பாதையையே நம்பியுள்ளது. ஈரானிய நெருக்கடி காரணமாக இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய ரீதியில் எண்ணெய் விநியோகம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகக் கடுமையாக உயரும். இலங்கை தனது இறக்குமதிக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தினாலும், சர்வதேச சந்தையில் நிலவும் அந்தப் பாரிய விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். விநியோகப் பாதை வேறாக இருந்தாலும், சர்வதேச சந்தை விலையின் தாக்கத்திலிருந்து நாம் தப்ப முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரை மிகப்பாரிய சிக்கல் என்னவெனில், உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது, மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்காக நாம் பெருமளவிலான டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். இது எமது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்புக்கு (Foreign Exchange Reserves) கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், நாட்டில் மீண்டும் டொலர் பற்றாக்குறை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் நேரடிப் பாதிப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும், இலங்கை இப்போதுதான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. இத்தருணத்தில் ஏற்படும் இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகள், 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய' கதையாக மாறி, எமது பொருளாதார மீட்சியை மீண்டும் சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உருவானால், அந்தப் பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் (Insurance Premium) மற்றும் இதர கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்தக் காப்பீட்டுத் தொகையானது மிகச் சிறியது அல்ல; மாறாக அது ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கக்கூடியது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கூடுதல் செலவுகள் அனைத்தும், இறுதியாக இலங்கையில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையுடனேயே சேர்க்கப்படும்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது ஆரம்பத்தில் Iranian Light வகை மூல எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டது. சர்வதேசத் தடைகள் காரணமாக நாம் தற்போது ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என்றாலும், ஒரு நெருக்கடி காலத்தில் சபுகஸ்கந்தவின் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குப் பொருந்தக்கூடிய மாற்று மூல எண்ணெயை (Alternative Crude Oil) விரைவாகக் கண்டறிவது என்பது எளிதான காரியம் அல்ல.
ஆக மொத்தத்தில், இலங்கைக்குப் பாரிய ஆபத்து என்பது கப்பல்கள் தடைப்பட்டு எரிபொருள் இல்லாமல் போவது அல்ல; மாறாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை உயர்ந்து எமது பொருளாதாரச் சுமை அதிகரிப்பதே ஆகும்.
எது எப்படியோ, அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே, எவரும் உச்சந்தலையைப் பிளக்கும் இந்தப் பங்குனி வெயிலில் தேவையற்ற முறையில் வரிசைகளில் நின்று காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், தனது வாகனத்தின் எரிபொருள் கலனை (Tank) நிரப்பிக் கொண்டால் மட்டும் போதும், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நெருக்கடியும் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் விசித்திரமான மனிதர்கள் வாழும் நாடு இது. இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களைத் திருத்துவது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே.
ஆக்கம்:- ச.துலாங்கன்.
