Tariffs

இந்தியாவின் திட்டமும் இலங்கையின் தயக்கமும்

இந்த கட்டுரை ஒரு சிங்கள கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.

இந்தியா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், வர்த்தகக் களத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) அது அண்மையில் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் புது டெல்லி மற்றும் பிரஸ்ஸல்ஸை தாண்டி பல தாக்கங்களை ஏற்படுத்தும். இது கொழும்பிலும் விளைவுகளை உருவாக்கும்.

பல ஆண்டுகளாக, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஜிஎஸ்பி பிளஸ்' (GSP+) திட்டத்தினால் பயனடைந்து வந்தது. GSP+ திட்டத்தின் கீழ், இலங்கை போன்ற வளரும் நாடுகள் மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி முறை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்கச் செயல்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் போது பூஜ்ஜியம் அல்லது சலுகை வரி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 

அந்தச் சலுகை அணுகல் ஒரு தெளிவான ஊக்கத்தை உருவாக்கியது. GSP+ அணுகல் இல்லாத இந்திய முதலீட்டாளர்கள், இலங்கையை ஐரோப்பிய சந்தைக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தனர். ஆடை, கடல் உணவு, இறப்பர் தயாரிப்புகள் மற்றும் பல உற்பத்தித் துறைகள் நேரடியாகப் பயனடைந்தன. GSP+ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகையின் காரணமாகவே சில நிறுவனங்கள் இலங்கையைத் தேர்ந்தெடுத்தன.
ஆனால், இந்தச் சூழ்நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.  

இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல்

இந்தியா இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், GSP+ இன் கீழ் இலங்கை அனுபவித்த ஒப்பீட்டு ரீதியான நன்மை அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, எமக்கு நிகரான அல்லது முன்னுரிமை அடிப்படையிலான அணுகல் இப்போது ஐரோப்பாவிற்கு கிடைக்குமென்றால், ஒரு காலத்தில் இலங்கையைத் தனித்துவப்படுத்திய வரிச் சலுகையின் தாக்கம் குறையத் தொடங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்பைப் பொறுத்தவரை, ஒரு தொழிற்சாலையை இலங்கையில் அமைப்பதற்கும் இந்தியாவில் அமைப்பதற்கும் இடையில் இனி பெரிய அளவில் வேறுபாடு இருக்காது.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு கட்டமைப்பு ரீதியான வேறுபாடும் உள்ளது. GSP+ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஒருதலைப்பட்சமாக வழங்கப்படும் ஒரு சலுகையாகும். அதனை எப்போது வேண்டுமானாலும் மீளப் பெறலாம். இதற்கு நேர்மாறாக, ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்பது இரு இறையாண்மையுள்ள அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்ட, பரஸ்பர ஏற்பாடாகும். இது வேறுபட்ட அளவிலான கணிக்கக்கூடிய தன்மை (predictability) மற்றும் சட்ட ரீதியான உறுதியைக் கொண்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியா கைச்சாத்திட்ட முதலாவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 1998 இல் கையெழுத்திடப்பட்டு 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 'இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (ISFTA) என்பதைப் பலர் நினைவில் வைத்திருப்பதில்லை. அக்காலப்பகுதியில், இரு நாடுகளும் தமது வர்த்தகத் தாராளமயமாக்கல் பயணத்தில் ஏறக்குறைய ஒரே நிலையிலேயே இருந்தன.

அதன் பிறகு, இந்தியா தீர்க்கமான முறையில் நகர்ந்து, வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 60 நாடுகள் மற்றும் முக்கிய பொருளாதாரக் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தமே கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளை எடுத்துக்கொண்டது. இதற்கிடையில், இலங்கையானது பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் பின்னர் தாய்லாந்துடன் ஒப்பந்தங்களைச் செய்திருந்தாலும், இந்த ஏற்பாடுகளின் ஆழம், பயன்பாடு மற்றும் சீரான தன்மை குறித்து கேள்விகள் நீடிக்கின்றன. இந்த வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாக தெரிகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல் ஏனைய உலகளாவிய தரப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வர்த்தக உறவுகள் மூலோபாய ரீதியானவை; ஒரு இடத்தில் ஏற்படும் ஒப்பந்தம் பெரும்பாலும் மற்ற இடங்களிலும் மாற்றங்களைத் தூண்டுகிறது. ஒரு பெரிய சந்தை இந்தியாவிற்குத் திறக்கப்படும்போது, மற்றவர்களும் அதைக் கவனத்தில் கொள்கிறார்கள்.

இலங்கையின் யதார்த்தம்

இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு, சந்தை அணுகலைப் பாதுகாப்பதில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) பெறுமதியான கருவிகளாகும். ஆனால் நாம் யதார்த்தத்தையும் யோசிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு பெருமளவில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை (SMEs) உள்ளடக்கியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்களின் பிறப்பிட விதிகள் (rules of origin), சான்றிதழ் தேவைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களுக்கு இணங்குவது செலவு குறைந்ததாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பல சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு, இந்த நிர்வாகச் சுமையே ஒரு தடையாக மாறுகிறது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்பது தானாகவே அது பயன்பாட்டிற்கு வரும் என்று அர்த்தமாகாது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் சிறிய உள்நாட்டு நிறுவனங்களை விட பெரிய அளவிலான முதலீட்டாளர்களையே ஈர்க்கின்றன. இருப்பினும், பெரிய முதலீட்டாளர்கள் கூட வரிச் சலுகைகளுக்காக மட்டும் வருவதில்லை. அவர்கள் ஸ்திரத்தன்மை, கணிக்கக்கூடியதன்மை மற்றும் கொள்கையிலுள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காகவே வருகிறார்கள். ஒரு வர்த்தக ஒப்பந்தத்தால் பேரினப் பொருளாதார ஸ்திரமின்மை அல்லது ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஈடுகட்ட முடியாது.

அதனால்தான் இலங்கை மேலதிக வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை எளிதாக்குதல், பரா-தீர்வை வரிகளை (para-tariffs) குறைத்தல், சுங்க நடைமுறைகளை முறைப்படுத்துதல் மற்றும் கணிக்ககூடிய வர்த்தக ஆட்சியை உருவாக்குதல் போன்ற ஒருதலைப்பட்சமான தாராளமயமாக்கல் நமக்குத் தேவை. வர்த்தகம் சார்ந்த வளர்ச்சி நமக்கு முக்கியம் எனின், வெளிப்படைத்தன்மை என்பது வெளிநாடுகளில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது; அது உள்நாட்டிலும் வேரூன்றியிருக்க வேண்டும்.

கண்டிப்பாக, இலங்கைக்கு இல்லாத சில கட்டமைப்பு ரீதியான நன்மைகளை இந்தியா கொண்டுள்ளது. அது அளப்பரிய பொருளாதாரப் பரிமாணம் (scale), பரந்த தொழிலாளர் படை மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் ஒரு பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. இலங்கையிடம் அந்த அளப்பரிய பரிமாணம் இல்லை. ஆனால் அந்த யதார்த்தம் தயக்கத்திற்கான ஒரு சாக்குப்போக்கு அல்ல; அதனால்தான் நாம் உலகளாவிய வர்த்தக வலைப்பின்னல்களில் வேகமாகவும் ஆழமாகவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஒரு எளிய பாடம்

ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று கணிப்புத்தன்மை ஆகும். ஆட்சி கட்டமைப்புகள் பெரும்பாலும் பலவீனமாகவும் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் நிகழும் இலங்கை போன்ற நாடுகளில், ஒருதலைப்பட்சமான வரி குறைப்புகள் கூட ஆட்சி மாற்றம் அல்லது அழுத்தம் கொடுக்கும் குழுக்களின் காரணமாக மாற்றியமைக்கப்படலாம். ஒரு பிணைப்பு ஒப்பந்தம் ஒழுக்கத்தை வழங்குகிறது. இது சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துகிறது.

தற்போதுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பரவலான தவறான கருத்துக்களும் உள்ளன. ISFTAஐ எடுத்துக்கொள்வோம். இது இந்தியாவிற்கு மட்டுமே அதிகப்படியான பலனைத் தருகிறது என்று பலர் கருதுகின்றனர். இருப்பினும், தரவுகள் மிகவும் நுணுக்கமான வேறு கதையைச் சொல்கின்றன.

2021 ஆம் ஆண்டில், இலங்கை இந்தியாவிற்கு சுமார் 815 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதில் சுமார் 525 மில்லியன் டொலர் (கிட்டத்தட்ட 64%) ISFTA சலுகைகளின் கீழ் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதே ஆண்டில், இலங்கை இந்தியாவிலிருந்து சுமார் 4.4 பில்லியன்  டொலர் பெறுமதியான பொருட்கள இறக்குமதி செய்தது, ஆனால் அதில் சுமார் 208 மில்லியன் டொலர் (5% க்கும் குறைவானது) மட்டுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கைக்கு வரும் பெரும்பாலான இந்திய ஏற்றுமதிகள் ISFTA சலுகைகளை நம்பியிருக்கவில்லை; அவை சாதாரண வரி விதிப்பின் கீழேயே நுழைகின்றன. மாறாக, இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு இந்த ஒப்பந்தத்தையே சார்ந்துள்ளது. ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட 'சிறந்தது' என்று ஒருவர் நம்பினால் கூட, இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு இலங்கைக்கு ஒரு அர்த்தமுள்ள அணுகலை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இதனை நீக்குவது அல்லது பலவீனப்படுத்துவது இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களையே அதிகம் பாதிக்கும்.

இதேபோன்ற ஒரு போக்கை பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் அவதானிக்கலாம்.

இந்தச் சூழலில், 'செஸ்' (cess) வரி மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) போன்ற மேலதிக வரிகளை நீக்கிவிட்டு, நான்கு அடுக்கு வரி கட்டமைப்பை நோக்கி நகர்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு பாராட்டத்தக்கது. இந்த முறைப்படுத்தல் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் சீர்திருத்தம் சீரானதாக இருக்க வேண்டும். வரிகளை எளிமைப்படுத்தும் அதே வேளையில், வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளான 'எதிர்மறைப் பட்டியல்களை' (negative lists) விரிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விலக்குகளை விரிவுபடுத்துவது தாராளமயமாக்கலின் நோக்கத்தையே முறியடிக்கிறது.

இந்தியா, தனது அரசியல் சொல்லாடல்களுக்கு மத்தியிலும், விவசாயம் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட உணர்திறன் மிக்க துறைகளைத் தவிர ஏனைய பகுதிகளில் தனது பொருளாதாரத்தை படிப்படியாகத் திறந்துவிட்டுள்ளது. உண்மையில், இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அண்மையில் 'The Economist' இதழில் எழுதியுள்ளவாறு, இந்தியா உலகின் மிகவும் திறந்த முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் விளிம்பில் இருக்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை, எமக்கான பாடம் மிகவும் எளிமையானது. வரம்புக்குட்பட்ட உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட ஒரு சிறிய தீவுப் பொருளாதாரத்தில், வர்த்தக சீர்திருத்தத்திற்கு நிலையான மாற்று வழி எதுவுமில்லை. பாதுகாப்புக் கொள்கை (protectionism) குறுகிய காலத்திற்கு பாதுகாப்பானதாகத் தோன்றலாம், ஆனால் தனிமைப்படுவது வாய்ப்புகளைச் சுருக்குகிறது. தயக்கம் காட்டுவது தீர்வாகாது. உலகப் பொருளாதாரத்துடன் வேகமான, ஆழமான மற்றும் முன்கணிப்பு செய்யக்கூடிய ஒருங்கிணைப்பே தீர்வாகும்.

வர்த்தகம் என்பது இலங்கைக்கு ஒரு ஆடம்பரமல்ல. அது ஒரு அத்தியாவசியம். அந்தச் சீர்திருத்தங்கள் இனி காத்திருக்க முடியாது.

வரிகள் மற்றும் தீர்வைகள் பற்றிய நன்கு முன் கூட்டிய திட்ட மிடப்படாத சட்டத்தின் விளைவுகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Tariffs and the law of unintended consequences

– அனீதா வருசவிதாரண

திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டம் எடம் ஸ்மித்துக்கு முந்தைய ஒரு கோட்பாடாகும், ஆனால் சமூகவியலாளர் ராபர்ட் கே. மேர்டன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. சுருக்கமாக, செட்ரிஸ் பரிபஸின் கோட்பாட்டினை (பிற காரணிகளை நிலையானதாக வைத்திருத்தல்) ஒரு சந்தை சூழ்நிலையில் அடைய முடியாது என்பதால், விளைவுகளின் தொகுப்பை உருவாக்க அரசாங்கங்கள் தலையிடுவதன் பெறுபேறாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

காலனித்துவ இந்தியாவும் நாகப் பாம்புகளும்

இது பிரித்தானியர் முதன்முதலில் இந்தியாவை காலனித்துவப்படுத்திய காலத்திலிருந்தே காணப்பட்ட இந்த சட்டம் ‘கோப்ரா எஃபெக்ட் (Cobra Effect)’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்த விஷப் பாம்புகள் குறித்து ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அக்கறை கொண்டிருந்தனர், நாகப்பாம்புகள் தெளிவாக சில கவலைகளுக்குக் காரணமாக இருந்தன.  இதற்கு அவர்கள் முன்வைத்த தீர்வு என்னவென்றால், கொல்லப்பட்ட ஒவ்வொரு நாகப்பாம்பிற்கும் ஒரு வெகுமதியை வழங்கியமை அருகிலுள்ள எந்தவொரு நாகத்தையும்  கைப்பற்றி கொல்ல உள்ளூர் மக்களுக்கு தெளிவான ஊக்கத்தை வழங்கியது. இது குறுகிய காலத்தில் நன்றாகச் செயற்பட்டாலும், ஆர்வமுள்ள நபர்கள் நாகப்பாம்புகளைத் தீவிரமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்பதை ஆங்கிலேயர்கள் மெதுவாக உணர்ந்தனர்; இது ஊக்குவிப்பு வெகுமதிகளைச் சேகரிக்கும்  மிகவும் இலாபகரமான வணிகத்தை உருவாக்கியது. இது தொடர்பாகத்  தெளிவடைந்ததுடன், பிரித்ததானியர்கள் ஊக்குவிப்பு வெகுமதிகளை அகற்றினர். அப்போது இது ஒரு இலாபகரமான முயற்சியாக இல்லாதிருந்தமையால், இனப்பெருக்கம் செய்து வளர்த்தவர்கள் தங்கள் எல்லா நாகப்பாம்புகளையும் விடுவித்தனர். இதன் இறுதி விளைவாகப் பொது நாகப்பாம்புகளின் தொகை அதிகரித்தமையானது இது எதனை அடையவேண்டுமெனத் தலையீடு மேற்கொள்ளப்பட்டதோ அதற்கு முற்றிலும் எதிரானதாகும்.

இது ஒரு நல்ல கதைக்கு வழிவகுக்கும் அதே வேளையில், திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டத்தின் பொருளாதார யதார்த்தங்கள் பெரும்பாலும் மிகவும் மோசமானவையாகவுள்ளன. சந்தையில் தலையீடுகள் பெரும்பாலும் நன்கு திட்டமிடப்பட்டவையாகவிருந்த போதிலும் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம் தீர்வைவரிகள் விடயமாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையானது,  அண்மையில் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட ஒரு சலவை இயந்திரங்களுக்கான தீர்வையின் எதிர்பாராத விளைவுகளை விவரித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதனையும், அந்தக் கைத்தொழிலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதனையும் கருத்திற்கொண்டே இந்தத் தீர்வை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் தீர்வையின் செயல்திறனை மதிப்பீடு செய்தால், தீர்வைவரியானது ஒரு மகத்தான வெற்றியாகும்; அமெரிக்க துணிகழுவுதல் மற்றும் உலர்த்துதல் தொழில்துறையானது சுமார் 1,800 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. இது ஒரு வெற்றிக் கதையாக எளிதில் எழுதப்படலாம்.


சலவை இயந்திரங்களின் மீதான திட்டமிடப்படாத விளைவு (Cobra Effect)

எவ்வாறாயினும், இங்கே கவனம் தயாரிப்பாளர் மீது மட்டுமே உள்ளதுடன் நுகர்வோர் கதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இப்போது அதிக விலை கொண்டவை என்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விற்பனையை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி பாதுகாப்பாக தங்கள் விலையை உயர்த்த முடிந்தது. இரண்டாவது திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், உலர்த்திகளும் அதிக விலை கொண்டதாக மாறின. அமெரிக்காவில் சலவை இயந்திரங்களுக்கு ஒரு நிரப்பு நன்மை என்ற வகையில், உலர்த்தி உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை உயர்த்தவும், இலாபத்தை அதிகரிக்கவும் சரியான சாளரமாக இதைக் கண்டனர் (ஆடைத் தொழில்துறை இலங்கையை இந்த எதிர்பாராத விளைவுகளிலிருந்து காப்பாற்றும்).

 

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஃபோர்ப்ஸின் கருத்துப்டி இதனால், அமெரிக்க நுகர்வோர் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர். இந்த விலைவாசி அதிகரிப்பு மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றை 1,800 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியதன் மூலம் நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிடலாம். உண்மை என்னவென்றால், ஒவ்வொரு வேலையும் அதிகரித்த நுகர்வோர் செலவில் 815,000 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். இந்த தீர்வைக் கொள்கையானது உள்ளூர் தொழில்துறையை தங்கள் சொந்த நுகர்வோரின் செலவில் திறம்படப் பாதுகாக்கிறது.


அமெரிக்காவில் சலவை இயந்திர விலைகளை இலங்கையர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?

இது திட்டமிடப்படாத விளைவுகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டாகத் தோன்றுகிறது என்பதையும், உள்நாட்டு நுகர்வோருக்கு இங்கு பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், சராசரி இலங்கை இதனை ஏன் கவனிக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் சன்லைட் சவர்க்காரமும் ஆடைத்துறையும் உள்ளன.

இலங்கை நுகர்வோர் கவலைப்பட வேண்டிய காரணம் என்னவென்றால் கடல் கடந்து அமெரிக்காவில் நிகழ்ந்த  அதே எதிர்பாராத விளைவுகள் இங்கே, நம் சிறிய தீவாகிய தேசத்திலும் நடைபெறுவதனால் ஆகும். தீர்வைவரி என்பது நீண்டகாலமாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் விருப்பமான கருவியாகும். தீர்வையானது ஆவணங்களில் மிகவும் நன்றாக இருக்கும், அந்த ஆவணமானது ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை என்று குறிப்பிட்டால் நல்லது. ‘நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்போம்’ என்பது பல வாக்காளர்களின் மனதைக் கவரும் ஒரு வாக்குறுதியாகும். சிறந்த அச்சில் ‘உள்நாட்டு நுகர்வோரின் செலவில்’ என்பது விளம்பரப்படுத்தப்படும் ஒன்றல்ல, ஆனால் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டுப் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் உணவு வரையிலான பொருட்களுக்குத் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் காலணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற வேறுபட்ட பொருட்களின் விலை இதனால் பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு எவ்வாறு அதிகமாக உள்ளது என்பது குறித்து முழு நாடும் முறைப்பாடு செய்கின்றது, நியாயமற்ற முறையில் அதிக தீர்வைகள் இதற்குப் பின்னால் உள்ள இயக்கிகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தீர்வைகளை விதிப்பது அமெரிக்க நுகர்வோர் எதிர்கொண்ட அதே தொடர்ச்சியான எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது. சராசரியாக இலங்கையரொருவர் வாராந்தம் பொருள்வாங்கி அதற்காகச் செலுத்தும் விலையானது, அது தெல்கந்தை சந்தையாகவிருப்பினும் சரி, நெருங்கிய பல்பொருள் அங்காடி அல்லது சந்தியிலுள்ள கடை எதுவாகவிருப்பினும் தீர்வைகளினால் பாதிக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கு, அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு இருக்க வேண்டிய விலையைவிட அதிக விலை கொண்டதாக இருக்கும், ஏனென்றால் தீர்வை வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை உயர்த்துகின்றன, இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நுகர்வோர் இழப்புடன் விலைகளை உயர்த்த அனுமதிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தீர்வைகள் 45% முதல் 107.6% வரை இருக்கலாம். நமது பொருளாதாரத்தில் தீர்வைகளின் பங்கு,  அவற்றை விதிப்பற்குப் பின்னால் இருக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணம், தீர்வையின் பின்விளைவுகள் (அவை நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றைத் தள்ளுபடி செய்யவோ புறக்கணிக்கவோ முடியாது)  மற்றும் அவற்றை அகற்றுவதற்குத் துரிதமானதொரு பொறிமுறை ஆகியவற்றைப் பற்றித் தீவிரமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.