இலங்கையின் ஏழைகளை வஞ்சிக்கும் அரச கொள்கைகள்!

Sunday Times நாளிதழில் வெளியான இக்கட்டுரை, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் (Emeritus Professor) சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்

2000 ஆம் ஆண்டு பிறக்கும் போது, இலங்கையர்களில் நால்வரில் ஒருவர் தேசிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். காலப்போக்கில் இந்த அளவு படிப்படியாகக் குறைந்து வந்த போதிலும், 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்து சேர்ந்துள்ளோம். இன்று, நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் (25%) மீண்டும் வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

உண்மையில், நாட்டில் திடீரென வறுமை தலைதூக்குவதற்கு தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகள் வழிவகுத்தன என்பதில் ஐயமில்லை. எனினும், இதன் பின்னாலுள்ள கொள்கைசார் காரணங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், அரசாங்கத்தின் கொள்கைத் திசைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் உடனடித் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் வறுமை தொடர்வதென்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல; அது திட்டமிட்ட கொள்கைசார் தெரிவுகளின் விளைவாகும். இக்கொள்கைகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மிக அதிக செலவுமிக்கதாக மாற்றுவதுடன், பாதுகாப்பாக வாழும் ஒரு சிறுபான்மையினரின் சொகுசு வாழ்க்கையை மட்டுமே உறுதி செய்கின்றன.

செலவுமிக்க அடிப்படைத் தேவைகள்

கடந்த வாரம் நாம் விவாதித்த 'Para-வரி' (Para-tariffs) நீக்கம் தொடர்பான கலந்துரையாடலின் அடிப்படையில் நோக்கினால், இலங்கையின் வறுமை என்பது வெறும் சந்தையின் 'தோல்வி' (Market failure) மட்டுமல்ல. மாறாக, இறக்குமதி கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் போன்ற கொள்கைகள் மூலம் அடிப்படைப் பொருட்களின் விலைகள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான மக்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் முதல் கட்டுமானப் பொருட்கள் வரை பரந்துபட்ட வரம்பில் காணப்படும் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (Protectionist policies), திறந்த சந்தைப் போட்டியை முடக்கி, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையாவதை ஊக்குவிக்கின்றன. தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகவே செலவிடும் ஏழை மக்களின் குடும்பங்களையே இந்த விலை உயர்வுகள் கடுமையாகப் பாதிக்கின்றன.

இலங்கையர்களில் 75%-க்கும் அதிகமானோர் இன்னும் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர்; நாட்டின் ஏழை மக்களில் ஐந்தில் நான்கு பங்கினர் (80%) கிராமங்களில்தான் வசிக்கின்றனர். அதுமட்டுமன்றி, நாட்டின் தொழிலாளர் படையில் கால் பகுதியினர் (25%) விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நாட்டின் ஏழைகளில் பெரும்பான்மையானோர் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத் துறையையே நம்பியுள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

உணவு, உடை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் எளிய உற்பத்திப் பொருட்களுக்கு ஏழைகள் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால், அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவதுடன், மிகக்குறைந்த கிராமப்புற வசதிகளுடன் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

அதிக விலைமிக்க உணவு, எட்டாக்கனியாகும் இருப்பிடம்

செஸ் வரி (Cess), ரேட் வரி (PAL), விசேட வர்த்தகப் பண்ட வரி (SCL) மற்றும் VAT போன்ற இறக்குமதி வரிகள் காரணமாக அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பால் பொருட்கள், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகமாகவே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த விலைகள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும்.

அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் போது, ஏழைப் பின்தங்கிய குடும்பங்களுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை. இதன் விளைவாக, அவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது ஊட்டச்சத்து குறைந்த மலிவான உணவுகளை நாடவோ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, உணவு விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் வேளை உணவைத் தவிர்ப்பதுடன், பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு தாங்கள் பட்டினியாக இருக்க பழகியுள்ளனர். இதுவொரு தற்காலிகச் சரிக்கட்டல் அல்ல. இது காலப்போக்கில் மந்தபோஷணை, வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும்.

வீடு அல்லது இருப்பிட வசதியைப் பொறுத்தமட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கொழும்பில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பின் விலையானது, நல்ல ஊதியம் பெறும் ஒரு நிறைவேற்று அதிகாரி (Executive) தனது 25 வருட வருமானத்தை முழுமையாகச் செலவிட்டால் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் உள்ளது. அதாவது, நடுத்தர வர்க்கத்தினருக்கே ஒரு வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கும் போது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அது வெறும் பகற்கனவாகவே கலைந்துவிடுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சிமெந்து, இரும்பு, டைல்ஸ் மற்றும் இயந்திரங்களுக்கான வரிகள் மற்றும் Para-வரிகள் காரணமாக கட்டுமானச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, வீடமைப்புத் துறையில் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது பின்னர் வாடகை மற்றும் வீட்டு விலைகளின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

நகரங்களில் வேகமாக உருவாகும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை பணக்காரர்களும், புலம்பெயர்ந்தோரும் (Diaspora), வெளிநாட்டினருமே வாங்குகின்றனர். அவர்கள் அவற்றை வசிப்பதற்காக அன்றி, ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். ஆனால், இந்த உயர்மட்ட சொத்துக்களை லாபகரமான முதலீடுகளாக மாற்றும் தற்போதைய கொள்கைகளும் வரி அமைப்பும், சாதாரண ஊழியர்கள் ஒரு சாதாரண நகர்ப்புற வீட்டைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைகளை உயர்த்தியுள்ளன.

“நகர்ப்புற வாழ்க்கை செலவுமிக்கதாக மாறும் போது, ஏழைகள் தொலைதூரக் கிராமங்களுக்கு விரட்டப்படுகிறார்கள். அங்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமன்றி, காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகளிடமிருந்தும் தமது உயிரைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது.”

தொழில்மயமாக்கலைத் தவறவிடுதல்

நீங்கள் வாழும் இடமே இறுதியில் உங்கள் வாழ்க்கையின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது. இதில் அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரி மற்றும் வர்த்தகச் சட்டங்கள் நகர்ப்புற வாழ்க்கையை அதிக செலவுமிக்கதாக மாற்றும் போது, ஏழைகள் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பின்தங்கிய கிராமங்களில் பிறப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளிலேயே முடங்கிப்போகிறார்கள். வளர்ந்து வரும் பொருளாதார மையங்களிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் இதே வரம்புகளையே எதிர்கொள்ள நேரிடுகிறது.

இலங்கையின் நீடித்த கிராமப்புற வறுமையானது, மெதுவான தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உள்ள பலவீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. விவசாயத் துறை தொழிலாளர் படையில் 25% பங்கைக் கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் பங்களிப்பு மிகச் சிறியதே. இதன் காரணமாக, அங்கு உற்பத்தித்திறன் குறைவாகக் காணப்பட்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர்.

மறுபுறம், கைத்தொழில் மற்றும் நவீன சேவைத் துறைகள் கிராமப்புறங்களிலுள்ள உபரி உழைப்பை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு வேகமாகவோ அல்லது பரந்த அளவிலோ விரிவடையவில்லை. பெரும்பாலும் 'உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் பாதுகாப்புவாதக் கொள்கைகள் நியாயப்படுத்தப்பட்டாலும், ஏற்றுமதி செய்யக்கூடிய மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய போட்டித்திறன் மிக்க தொழில்களை ஊக்குவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பதிலாக, சிறிய உள்நாட்டுச் சந்தையைப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் வேலைகளே நடக்கின்றன. இது நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து லாபம் ஈட்டுவதை விட, சந்தையில் ஏற்படும் தட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதையே ஊக்குவிக்கிறது.

இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை உள்ளீடுகளை இறக்குமதி செய்யும் போது அதிக வரிகள் விதிக்கப்படுவதால், முதலீடு, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவு துல்லியமானது: தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் சேவை மையங்களும் குறைகின்றன. இதனால், வாழ்வாதார விவசாயம் அல்லது முறைசாரா வேலைகளில் சிக்கி, வேறு துறைகளுக்கு மாற முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு யாருக்கு வழங்கப்படுகிறது?

உயர் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உரிமக் கட்டுப்பாடுகள் (Licensing) பெரும்பாலும் 'விவசாயிகளைப் பாதுகாத்தல்' அல்லது 'உள்நாட்டுத் தொழில்துறையைக் காத்தல்' என்ற பெயரிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் நடைமுறையில், இவை வரையறுக்கப்பட்ட போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற முடிவெடுத்தல் மூலம் லாபமடையும் ஒரு சில வர்த்தகர்கள், அரசியல் செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் மற்றும் சில இடைத்தரகர்களை மட்டுமே பணக்காரர்களாக்கியுள்ளன.

மோட்டார் வாகனங்கள் முதல் கோழித்தீவனம் வரை, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, வரிகள் மற்றும் கோட்டாக்களில் (Quotas) ஏற்படும் திடீர் மாற்றங்களால், சரியான நேரத்தில் கையிருப்புகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே எதிர்பாராத கொள்ளை லாபத்தை மீண்டும் மீண்டும் பெறுகின்றனர்.

இவற்றுக்கு மத்தியில், 22 மில்லியன் நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுத்து தங்களின் வாழ்வை இழக்கின்றனர். இந்த 22 மில்லியனுக்குள் ஏழைகளும், வறுமைக்கோட்டிற்கு அண்மையிலுள்ளோரும், மற்றுமொரு பொருளாதார அதிர்ச்சியால் வறுமைக்குள் வீழக் காத்திருப்பவர்களுமே அடங்குவர்.

முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த யதார்த்தத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்:

"இக்கொள்கையானது உள்நாட்டில் இயங்கும் ஒரு சில குடும்ப வணிகங்களைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது."

இதற்காக நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையே காணப்படுகிறது.

பாதுகாப்புவாதத்தின் அரசியல் பொருளாதாரம் (Political Economy of Protectionism) என்பது இதுதான்: சமூகத்தின் உச்சியிலுள்ள சில பயனாளிகளின் கூட்டமைப்பைப் பேணிக்கொண்டு, சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களுக்குத் தெரிவுகளையும் வாய்ப்புகளையும் மறுத்து, அவர்களை அதிக விலை நுகர்வுக்குள் அடிமையாக்குவதாகும்.

நாம் சந்தையைத் திறந்தால் என்ன நடக்கும்?

இப்போது இந்த நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றி சிந்தித்துப் பாருங்கள். கூடுதல் இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டால், உணவு, உடை மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் மலிவான விலையில் பெற முடியும். தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடும் ஏழைகளுக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த மாற்றம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

குறைந்த இறக்குமதி வரிகள் மூலம் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தமக்குத் தேவையான மூலப்பொருட்களை மலிவாகப் பெற முடியும். இம்முறையைப் பின்பற்றினால், வெளிநாட்டுப் போட்டிக்கு அஞ்சி ஒளிந்திருப்பதை விடுத்து, திறம்படப் போட்டியிடும் திறன் வளரும். காலப்போக்கில், ஒரு மூடிய உள்நாட்டுச் சந்தையிலிருந்து விடுபட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டியிடும் நிலைக்கு நமது வணிகங்கள் உயரும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கு என்ன நடக்கும்? வர்த்தக வரிகள் (Trade taxes) தற்போது அரசாங்கத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், அவை மிகவும் பின்தங்கிய மற்றும் முற்போக்கான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு கருவியாகும்.

இலங்கையின் உள்நாட்டு வரிப்பகுப்பாய்வை முறையான வருமான வரி, நிறுவன வரி மற்றும் நுகர்வு வரி நிர்வாகத்தின் மூலம் படிப்படியாக விரிவுபடுத்தும் போது, உணவு மற்றும் இருப்பிடத்தின் மீது சுமையேற்றாமல் அரசாங்கத்தின் வருவாயைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது அதிகரிக்கவோ முடியும்.

சர்வதேச அனுபவங்கள் காட்டுவது போல, திறமையான உள்நாட்டு வரிகளை நோக்கி படிப்படியாக மாறுவது, நிதி ஆரோக்கியத்திற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் உந்துசக்தியாக அமையும். இங்கு முக்கியமானது எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதல்ல, வரி எங்கிருந்து, எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பதே ஆகும்.

முக்கியமானது விலைகளைப் பாதுகாப்பதல்ல, மக்களைப் பாதுகாப்பதே!

இலங்கையின் வறுமைப் பிரச்சினை பெரும்பாலும் வருமானமின்மையாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால், பொதுவான பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஒரு 'விலை பிரச்சினை' (Price problem) என்பது புலனாகும். இதன் விளைவாகவே அத்தியாவசியத் தேவைகள் எட்ட முடியாத உயரத்தில் உள்ளன.

தொடர்ந்து வரிகளை விதித்து, மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, உணவு மற்றும் வீட்டு விலைகளை உயர்த்தி, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை மட்டுப்படுத்தினால், அது உண்மையான உற்பத்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக வறுமையையே நிரந்தரமாக்கும்.

மாறாக, சந்தையைத் திறந்து, கூடுதல் இறக்குமதி வரிகளைக் குறைத்து, வரி முறையை மேம்படுத்தி, வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளில் முதலீடு செய்தால், செயற்கையாக விலைகளை உயர்த்துவதை விடுத்து மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க முடியும்.

இலங்கையினால் தாராளமயமாக்கல் (Liberalization) செய்ய முடியுமா இல்லையா என்பது கேள்வியல்ல. உண்மையான கேள்வி என்னவெனில், பாதுகாப்புவாதம் என்ற போலிப் பெயரில் ஏழைகளைப் பட்டினியிலும், கிராமப்புறத் தனிமைப்படுத்தலிலும் வைத்திருக்கும் இந்த வங்குரோத்து பொருளாதார மாதிரியை நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே ஆகும்.

"இக்கட்டுரையானது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியரும், வறுமை பகுப்பாய்வு மையத்தின் (CEPA) நிறைவேற்று பணிப்பாளருமான பேராசிரியர் சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். அவரை sirimal@econ.cmb.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது @SirimalAshoka என்ற எக்ஸ் (X/Twitter) கணக்கின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்."

மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.