2022-ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் எழுதப்பட்ட மிக இருண்டதொரு பொருளாதாரப் பக்கம். அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை, எரிபொருள் வரிசைகள், மருந்துத் தட்டுப்பாடு என ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்த அந்தப் பாரிய வீழ்ச்சியின் வடுக்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. கடுமையான வரிச் சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகள் என ஒருவாறு பொருளாதாரம் மீண்டுவரத் தட்டுத்தடுமாறி முயற்சிக்கும் இந்த வேளையில், இயற்கை நமக்கு மற்றுமொரு பாரிய சோதனையைத் தயார் செய்துள்ளது.
ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமடையவுள்ள ‘சூப்பர் எல்-நினோ’ (Super El Niño) எனும் அதிவெப்பக் காலநிலை, இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை உலுக்கப் போகிறது என உலக வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பொதுவாக, காலநிலை மாற்றங்களை நாம் வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த அல்லது அறிவியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கிறோம். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, காலநிலை என்பது நமது நாட்டின் GDP, பணவீக்கம், அந்நியச் செலாவணி மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தோடு நேரடியாகப் பின்னிப் பிணைந்த ஒரு பொருளாதாரக் காரணியாகும். காரணம், இலங்கையின் அமைவிடம். வருடம் முழுதும் வெயிலும் மழையும் கிடைக்கிறது. மத்திய கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாமல் சமமாக கிடைக்கும் வளமான நாடு என்று புவியியல் பாடத்தில் படித்த ஞாபகம் உங்களுக்கு வந்து இருக்கலாம். அந்த அளவு, புவியியல் ரீதியாக, விவசாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்நிலையில், வரப்போகும் Super El Niño ஒரு பெரு வரட்சியை உருவாக்கலாம் என்று எச்சரிப்புகள் வெளியாகின்றன.
1. இயற்கையின் சீற்றம்: 'சூப்பர் எல்-நினோ' என்றால் என்ன?
புவியியல் ரீதியாக, தென் அமெரிக்காவின் மேற்குப் கடற்கரைப் பகுதியில் (பெரு நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்) இருந்து பசுபிக் பெருங்கடலை நோக்கி வீசும் காற்றுகளின் (Trade Winds) வேகம் குறையும்போது, அக்கடல் பகுதியில் வெப்பம் குவிகிறது. இதனால் மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிகம் வெப்பமடைகிறது. இந்த உலகளாவிய வானிலை நிகழ்வுதான் 'El Niño'.
ஆனால், தற்போது உருவாகி வருவது சாதாரண El Niño அல்ல, வீரியம் மிக்க 'Super El Niño'. இதன் நேரடிப் பாதிப்பாக, தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கையில் வீசும் தென்மேற்கு பருவக்காற்று கடுமையாகப் பலவீனமடையலாம். மழைப்பொழிவு இயல்பான அளவை விட வெகுவாகக் குறைந்து, வறண்ட காலநிலையும், அதீத வெப்பநிலையும் நீடிக்கலாம்.
2. விவசாயப் பேரழிவும் பொருளாதாரச் சங்கிலியும்
இலங்கையின் விவசாய அச்சாணியாக விளங்கும் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற உலர் வலய மாவட்டங்கள் தான் நாட்டின் ஒட்டுமொத்த உணவுத் தேவைக்கான நெல் உற்பத்தியை மேற்கொள்கின்றன. Super El Niñoவினால் இந்த மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வற்றத் தொடங்கும்போது, அது ஒரு சங்கிலித் தொடரான பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும்:
நீர் பற்றாக்குறையால் பயிர்ச்செய்கை பாதியாகக் குறையலாம். அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையும் போது, சந்தையில் தேவை அதிகரித்து விநியோகம் குறையும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நுகர்வு திறனைக் கடுமையாகப் பாதிக்கும்.
பருவப்பெயர்ச்சி காலங்களில் இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் சுமார் 30% முதல் 35% வரை நீர்மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. வறட்சியால் சமனலவெவ, விக்டோரியா, ரந்தெனிகல போன்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் குறையும் போது நீர்மின் உற்பத்தி மொத்தமாக முடங்கும்.
மின்சாரத் தேவையை ஈடுசெய்ய அரசாங்கம் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படும் டீசல் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஏற்கனவே தட்டுப்பாடாக இருக்கும் டொலர்களை மீண்டும் எரிபொருள் இறக்கமதிக்காகச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, அது இலங்கை ரூபாயின் பெறுமதிக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
3. கொள்கை முடக்கங்களும் தடையற்ற சந்தையின் (Free Market) அவசியமும்
இயற்கை தரும் சவால்களை விட, நமது அரசாங்கத்தின் இறுக்கமான, முதிர்ச்சியற்ற கொள்கைகளே இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கப் போகின்றன. 2021-ல் இரசாயன உரங்களுக்கு ஒரே இரவில் விதிக்கப்பட்ட அவசரத் தடை, நமது நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் 25% வரை எப்படிச் சீரழித்தது என்பதை நாம் அறிவோம். அந்தப் பாதிப்பில் இருந்து விவசாயிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இன்று உரத்தடை நீக்கப்பட்டிருந்தாலும், தடையற்ற சந்தை (Free Market) முறைமைக்கு இலங்கை இன்னும் முழுமையாக மாறவில்லை.
அரசாங்கம் விவசாயப் பொருட்களுக்கு விலை கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அது தற்காலிகமாக நுகர்வோருக்கு உதவுவது போல் தோன்றலாம். ஆனால் நீண்ட நோக்கில், உற்பத்திச் செலவு அதிகரிக்கும் வறட்சி காலங்களில் விவசாயி தனது பொருளைச் சரியான விலைக்கு விற்க முடியாவிட்டால், அவர் நஷ்டமடைந்து அடுத்த முறை பயிர் செய்வதையே நிறுத்திவிடுவார். இது சந்தையில் இன்னும் பெரிய தட்டுப்பாட்டை உருவாக்கும்.
சர்வதேச சந்தையில் வறட்சியைத் தாங்கக்கூடிய வீரியமிக்க விதைகள் (Drought-resistant seeds) தாராளமாகக் கிடைத்தாலும், நமது நாட்டின் கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரத்துவத் தாமதங்கள் காரணமாக அவை விவசாயிகளுக்குச் சென்றடைவதில்லை. நாம் இன்னும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய விவசாய முறைகளையும், நெல் வகைகளையும் மட்டுமே நம்பியிருக்கிறோம்.
4. தொழில்நுட்பப் பற்றாக்குறையும் முதலீட்டுத் தடைகளும்
சமீபத்தில்தான் விவசாயத்தில் 'ட்ரோன்' (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆரம்பக்கட்ட சோதனைகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலக நாடுகள் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி நீர்ப்பாசனம் மற்றும் தரவுப் பகுப்பாய்வு மூலம் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டன.
சொட்டு நீர் பாசனம் மற்றும் வறட்சி காலங்களில் விளைச்சலைப் பாதுகாக்கும் நவீன களஞ்சிய வசதிகளை (Cold Storage) பெரிய அளவில் உருவாக்க அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. இவ்வாறான சூழலில், தனியார் முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், பழைய சோசலிசக் கொள்கைக் கட்டமைப்புகளும், அதிகப்படியான அரசாங்கத் தலையீடுகளும் இப்புதிய தொழில்நுட்ப முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
5. நாம் செய்ய வேண்டிய அவசரக் காலப் பொருளாதார நடவடிக்கைகள்
நெருக்கடி நம் வாசலில் நிற்கிறது. இப்போதிலிருந்தே நாம் போர்க்கால அடிப்படையில் சில கொள்கை மாற்றங்களைச் செய்ய வேண்டும்:
பயிர் பல்வகைப்படுத்தல்: வரப்போகும் பெரும்போக பயிர்ச்செய்கை பருவத்தில், அரசாங்கம் விவசாயிகளை நெல் உற்பத்தியை மட்டுமே நம்பியிருக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது. குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், அதற்கான உலகத்தரம் வாய்ந்த விதைகள் சந்தையில் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
முன்கூட்டிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் அரிசி, உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை இப்போதே சுதந்திர வர்த்தக அடிப்படையில் செய்துகொள்ள வேண்டும். நெருக்கடி உச்சமடைந்து சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் போது அவசர விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க இதுவே ஒரே வழி.
2022-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சரிவு என்பது முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவாக கொள்ளலாம். ஆனால், இந்த Super El Niño என்பது இயற்கையின் சவால்.
இயற்கையின் முடிவுகளை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் அதன் பாதிப்புகளின் தீவிரத்தைத் துல்லியமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தடையற்ற சந்தை முறைமைகளின் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இப்போதும் சந்தையைக் கட்டுப்படுத்த நினைக்கும் காலாவதியான கொள்கைகளை இறுகப் பற்றிக்கொள்ளப் போகிறோமா அல்லது நவீன பொருளாதார மாற்றங்களுக்குத் தயாராகப் போகிறோமா என்பதில் தான் இலங்கையின் உணவுப் பாதுகாப்பும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஆனால் நமக்கு எப்போதும் போல நேரம் மிகக் குறைவாகவே உள்ளது!
ஆக்கம்:- ச.துலாங்கன்.

