இலங்கை மின்சார துறை மறுசீரமைப்பு 2026: சவால்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள்

அருள்கார்க்கி | கொள்கை ஆய்வாளர்

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் இறக்குமதித் தங்கியிருப்பு 

இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்பு வெற்றியடைய வேண்டுமாயின், மின் உற்பத்தியானது எரிபொருள் இறக்குமதியுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பையும், அதில் காணப்படும் உட்கட்டமைப்பு பலவீனங்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும். 2026 மார்ச் மாதத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சாரத் துறையின் தங்கியிருப்பு நிலை ஆகியவை நுகர்வோர் மீது இரட்டைச் சுமையைச் சுமத்தியுள்ளன. 

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கை இதுவரை ஒரு தனித்துவமான 'மூலோபாய எரிபொருள் இருப்பைப்' (Strategic Reserve) பேணவில்லை. மாறாக, அன்றாடத் தேவைக்கான 'சுழற்சி இருப்பு' (Rolling Stocks) முறையிலேயே இயங்குகின்றது. இது மின்சாரத் துறைக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) பரிந்துரைப்படி 90 நாட்களுக்கான இருப்பு இல்லாதது, மத்திய கிழக்கு போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகளின் போது அனல் மின் உற்பத்தியை (Thermal Power) முற்றாக முடக்கி, நாடு தழுவிய மின் தடையை உருவாக்கக்கூடும். 

இலங்கையின் மின் உற்பத்தியில் அரைவாசிக்கு மேற்பட்டவை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் டீசல் மூலமே பெறப்படுகின்றன. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் குறைவாக இருப்பதால், இலங்கை அதிக விலைகொடுத்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயையே (Refined Oil) இறக்குமதி செய்கின்றது (2,939.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 2025). இந்த அதிகப்படியான செலவீனமே மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அதிகரித்து 

கொழும்பு துறைமுகத்திலிருந்து களஞ்சிய முனையங்களுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் 90 ஆண்டுகள் பழமையான குழாய்கள் மூலம் ஏற்படும் கசிவுகள் மற்றும் தொழில்நுட்ப இழப்புகள், மறைமுகமாக மின் உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றன. 99 டாங்கிகளைக் கொண்ட "உறங்கும் இராட்சதன்" என அழைக்கப்படும் திருகோணமலை எண்ணெய் பண்ணை, மின் உற்பத்தித் தேவைகளுக்கான ஒரு பிரதான சேமிப்பு மையமாக இன்னும் முழுமையாக மாற்றப்படவில்லை. 

மின்சாரத் துறை மறுசீரமைப்பு என்பது வெறும் இலங்கை மின்சார சபையைப் (CEB) பிரிப்பதோடு நின்றுவிடக் கூடாது. அது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இறக்குமதி மற்றும் களஞ்சியப்படுத்தல் கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு 'தேசிய வலுசக்தி பாதுகாப்புக் கொள்கையாக' அமைய வேண்டும். Advocata Institute (2023) வலியுறுத்தியபடி, இறக்குமதி எரிபொருட்களில் தங்கியிருப்பதை விரைவாகக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதே இத்தகைய நிதிப் பாதிப்புகளிலிருந்து மின்சாரத் துறையைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.  

முக்கிய செய்தி

இலங்கை மின்சார சபை (CEB) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் கீழ் ஆறு தனியார் நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் வலுசக்தி வரலாற்றில் தசாப்தங்களாகத் தொடர்ந்த ஏகபோக நிர்வாகத்திற்கும், நட்டங்களும் இலங்கை மின்சார சபைக்குள் இருக்கும் பாரிய ஊழல்களும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். இந்த மறுசீரமைப்பின் எதிர்பார்ப்புக்களையும் உண்மையான பலன்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டுமென்றால், கொள்முதல் முறைகேடுகள், அரசியல் தலையீடுகள், எரிசக்தி வறுமை மற்றும் பசுமை மாற்றம் என்ற நான்கு மையச் சவால்களை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும்.

தெற்காசியாவிலேயே வீட்டுப் பாவனைக்கான மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

Verité Research (2023) - Analysis of Electricity Tariffs in South Asia. மற்றும் Advocata Institute (2024).

புதிய கட்டமைப்பு — என்ன மாறியது?

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு பின்வரும் ஆறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
Lanka Electricity Generation Lanka (Pvt) Ltd — மின் உற்பத்தியை முகாமைத்துவம் செய்தல்

National Transmission Network Service Provider (Pvt) Ltd — தேசிய மின் கடத்தல் கட்டமைப்பைப் பராமரித்தல்

Electricity Distribution Lanka (Pvt) Ltd (EDL) — நுகர்வோருக்கான மின் விநியோகம்

National System Operator (Pvt) Ltd — மின் முறைமைச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்

Employees Fund (Pvt) Ltd — ஊழியர் நலன்புரி நிதியங்களைக் கையாளுதல்

Energy Ventures Lanka (Pvt) Ltd — புதிய எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துதல்

இந்த மறுசீரமைப்பின் மிக முக்கியமான அம்சம் யாதெனில், மின்சாரக் கொள்முதல்கள் அனைத்தும் இனி போட்டி அடிப்படையிலான விலைமனுக் கோரல் (Competitive Procurement) மூலமே நடைபெறும் என்பதாகும். இது கடந்தகால கொள்முதல் முறைகேடுகளுக்கான நேரடியான கட்டமைப்பு மாற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை கொண்டுள்ள மொத்தக் கடன் சுமை, 600 பில்லியன் ரூபாய்களையும் கடந்துள்ளது.

நிதி அமைச்சு (Ministry of Finance) - Annual Report & Fiscal Management Report.

உடனடி சவால்கள் 

1. கொள்முதல் முறைகேடுகள்

Transparency International Sri Lanka (TISL, 2026) நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் கடுமையான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. விநியோகஸ்தர் தெரிவில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிலக்கரி தரக் கண்காணிப்பு பதிவுகளில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு (COPE) விசாரணைகளில் தகவல் மறைக்கப்படுவது என்பன நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. Verité Research (2024) வலுசக்தித் துறையின் கொள்முதல் கட்டமைப்பில் உள்ள இத்தகைய ஓட்டைகள் பொது நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கின்றன என எச்சரித்துள்ளது. "கொள்முதல் மேற்பார்வையில் காணப்படும் பலவீனங்கள் பொது வளங்களின் வினைத்திறனான பயன்பாடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுவிழக்கச் செய்யும்" என TISL (2026) கடுமையாக எச்சரித்துள்ளது.

2. எரிசக்தி வறுமை மற்றும் சமூக நீதி

மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்படும் "செலவை அடிப்படையாகக் கொண்ட விலைக் கொள்கை" (Cost-reflective Pricing) மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கக்கூடும். இது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே "எரிசக்தி வறுமையை" (Energy Poverty) உருவாக்கும் என Institute of Policy Studies (IPS, 2024) எச்சரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த ஊதியம் பெறுபவர்கள் மத்தியில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும். மின்சாரக் கட்டண உயர்வு ஒரு குடும்பத்தின் உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகளைக் குறைக்க வழிவகுக்கும் என்பது கவலைக்குரியது.

  இறக்குமதியில் தங்கியிருக்கும் இருள்;   இலங்கையின் மின் உற்பத்தியில் 45% - 50% வரை நிலக்கரி மற்றும் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்தே பெறப்படுகிறது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) - Annual Generation Reports.

அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக ஆளுமை

மின்சாரக் கட்டண நிர்ணயம் என்பது ஒரு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் செயன்முறையாக இருக்க வேண்டுமே தவிர, அது அரசியல் வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாக இருக்கக்கூடாது. PUCSL (2024) வலியுறுத்தியுள்ளபடி, நுகர்வோர் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே சமநிலையைப் பேண ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். Ravi Ratnasabapathy (2015) சுட்டிக்காட்டுவது போல, தகைமை அல்லாமல் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகள் நிர்வாகப் பொறுப்புக்கூறலை முற்றாக இல்லாமல் செய்கின்றனர்.

கொள்கைப் பரிந்துரைகள்

1. ஒழுங்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்துதல்

PUCSL இன் சுயாதீனத்தன்மையை சட்ட ரீதியாகப் பாதுகாத்து, கட்டண நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசியல் தலையீட்டை முற்றாக ஒழிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு நிறுவனங்களுக்கிடையே நியாயமான போட்டியினை உறுதிப்படுத்துவதும் PUCSL இன் கட்டாயப் பொறுப்பாக அமைய வேண்டும்.

2. கொள்முதல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்

TISL (2026) சுட்டிக்காட்டிய நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அனைத்துக் கொள்முதல் செயன்முறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுயாதீன அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வலுவான கொள்முதல் அமைப்புகள் இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு மறுசீரமைப்பும் பொது நிதியை மீண்டும் ஒரு "நிழல் பொருளாதாரத்திற்கே" இட்டுச் செல்லும்.

3. இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு

அரசாங்கம் "அஸ்வெசும" (Aswesuma) போன்ற சமூக நலத்திட்ட தரவுகளைப் பயன்படுத்தி உண்மையிலேயே வறிய நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நேரடி நிதி உதவிகளை வழங்க வேண்டும். IPS (2024) பரிந்துரைப்பது போல, மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் நலிந்த மக்களைப் பாதுகாக்க "இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள்" (Targeted Subsidies) கட்டாயமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

4. பசுமை வலுசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துதல்

Energy Ventures Lanka (Pvt) Ltd நிறுவனமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் தனியார் துறையினரின் பங்களிப்பை வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மையுள்ள முறைகளின் கீழ் ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் குறைக்கும்.

  நாளுக்கு 250 மில்லியன் ரூபாய் நட்டம்:  2026 மறுசீரமைப்புக்கு முன்னர், மின்சார சபை நாள் ஒன்றுக்குச் சுமார் 250 மில்லியன் ரூபாய் வரை நட்டத்தைச் சந்தித்து வந்தது.

Ravi Ratnasabapathy (2015/2023) - State-Owned Enterprises: The Financial Black Hole.

நிதிச் சுமை மற்றும் பொருளாதார விளைவுகள்

CEB போன்ற அரசு நிறுவனங்கள் தொடர்ச்சியான நட்டங்களால் அரச வங்கிகளிடம் பாரியளவில் கடன் பெறுவதால் தனியார் துறைக்கான கடன் வாய்ப்புகள் குறைகின்றன — இதுவே பொருளாதாரத்தில் "Crowding Out" என்றழைக்கப்படும் எதிர்மறை விளைவாகும் (Ratnasabapathy, 2015). 2014 தரவுகளின்படி 55 அரசு நிறுவனங்கள் சுமார் 126 பில்லியன் ரூபாய் வரவுசெலவுத் திட்ட ஆதரவும் 47.6 பில்லியன் ரூபாய் திறைசேரி பிணைமுறிகளும் பெற்றுள்ளன. இது நாட்டின் சர்வதேச கடன் தரப்படுத்தல் நம்பகத்தன்மையையும் சிதைத்துள்ளது.

ஏகபோகத்தின் விலை

இலங்கையின் மின்சாரக் கட்டணம் ஆசியாவிலேயே மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது — இந்தியா, வியட்நாம் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாகிறது (Advocata Institute, 2023). போட்டியின்மையால் ஏற்படும் "X-Inefficiency" — அதாவது லாபமீட்டும் ஊக்கமோ அல்லது நட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்ற பயமோ இல்லாத காரணத்தால் — CEB இன் மிகை ஊழியர் எண்ணிக்கையும் தேவையற்ற நிர்வாகச் செலவுகளும் அனைத்தும் இறுதியில் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தின் ஊடாகவே ஈடுசெய்யப்படுகின்றன.

சூரிய மற்றும் காற்றுச் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம்: 

தற்போது 15% க்கும் குறைவாகவே உள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) - Annual Report 2024 (Real Sector Section)

வலுசக்தி பாதுகாப்பும் பசுமை மாற்றமும்

2022 ஆம் ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடும் பாரிய மின்சாரத் தடைகளும் இறக்குமதி எரிபொருட்களை அதிகம் சார்வதன் அபாயத்தை உறுதிப்படுத்தின. அரசாங்கம் 2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், தற்போதைய மையப்படுத்தப்பட்ட மின் கடத்தல் கட்டமைப்பு இத்தகைய மாற்றத்தை உள்வாங்குவதற்குப் போதுமானதாக இல்லை என Advocata Institute (2023) சுட்டிக்காட்டியுள்ளது. காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற இடைவிட்டுக் கிடைக்கும் எரிசக்தி மூலங்களை நிர்வகிக்க Smart Grid தொழில்நுட்பமும் Battery Storage கட்டமைப்புகளும் அவசியமாகும்.

இந்தியாவில் டெல்லி முன்னெடுத்த மின் விநியோகச் சீர்திருத்தங்கள் தொழில்நுட்ப இழப்புகளைக் குறைத்து நுகர்வோர் சேவையை மேம்படுத்தியதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. வியட்நாம் தனது மின்சாரச் சந்தையை படிப்படியாகத் திறந்துவிட்டதன் மூலம் பாரியளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்த்துள்ளது — இது ஏகபோக உரிமையை ஒழிப்பதன் மூலம் எவ்வாறு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்பதற்குச் சிறந்த பாடமாகும்.

  காற்றோடு போகும் மின்சாரம்:  இலங்கையில் மின் கடத்தல் மற்றும் விநியோக இழப்பு

 (Transmission & Distribution Losses) 8.5% முதல் 9% வரை உள்ளது.

Ceylon Electricity Board (CEB) - Statistical Digest 2024.

பின்னணி சூழல்

இலங்கையின் மின்சாரத் துறை தசாப்த காலங்களாக ஒரு "இயற்கை ஏகபோகமாக" அரசால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பல தசாப்தங்களாக நிலவி வரும் பாரிய நிதி இழப்புகள், அரசியல்மயப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கின. Ravi Ratnasabapathy (2015) "State-Owned Enterprises: The Financial Black Hole" என்ற ஆய்வில் இதை விரிவாக நிரூபித்துள்ளார். Advocata Institute (2023) "Reforming the Power Sector in Sri Lanka" என்ற கொள்கை ஆய்வு ஆவணத்தில் ஏகபோகத்தை ஒழித்து போட்டியை உருவாக்குவதன் (Unbundling) மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கலாம் என்பதை தரவுகளுடன் விளக்கியுள்ளது. இந்தப் பின்னணியில்தான், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பிற்கு (Structural Reform) 2024 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கியது.

முடிவுரை

இலங்கை மின்சார சபையின் கலைப்பு மற்றும் புதிய ஆறு நிறுவனங்களின் உருவாக்கம் என்பது இலங்கையின் வலுசக்தி வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, அது ஒரு பாரிய மாற்றத்தின் ஆரம்பம் மட்டுமேயாகும். தசாப்த காலங்களாகத் தொடர்ந்த திறமையற்ற நிர்வாகம் மற்றும் சந்தைப் போட்டியின்மை என்பவற்றிலிருந்து விடுபட்டு, ஒரு நவீன, வினைத்திறன் மிக்க வலுசக்தித் துறையை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கும் ஒரு "நிதிப் படுகுழியாக" (Financial Black Hole) மாறுவதைத் தடுப்பதே இந்த மறுசீரமைப்பின் முதன்மையான இலக்காக இருக்க வேண்டும். Transparency International Sri Lanka (TISL, 2026) மற்றும் Verité Research (2024) ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வரும் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகக் கலாச்சாரம் என்பன முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துக் கொள்முதல் செயன்முறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுயாதீன அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் போதே, நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை மீளக் கட்டியெழுப்பப்படும்.

மேலும், இந்த மாற்றமானது IPS (2024) வலியுறுத்தியது போல ஒரு "சமூக நீதியான மாற்றீடாக" (Just Transition) அமைவது அவசியமாகும். மின்சாரக் கட்டணச் சீர்திருத்தங்கள் நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில், சரியான இலக்குகளை நோக்கிய மானியக் கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகள் பலப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, Advocata Institute (2023) முன்வைத்த பரிந்துரைகளுக்கமைய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே, இலங்கை 2030 ஆம் ஆண்டிற்கான பசுமை வலுசக்தி இலக்குகளை அடைய முடியும். இந்த மறுசீரமைப்புச் செயன்முறையானது, தொழில்முறை நிபுணத்துவம் (Professionalism), வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக்கூறல் (Accountability) ஆகிய மூன்று தூண்களின் மீது கட்டப்பட வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் மட்டுமே, மின்சாரத் துறையானது இலங்கையின் பொருளாதாரச் சுமையாக அன்றி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வலுவான உந்துசக்தியாக மாறும்.