அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய சுங்க வரிகள் உலக பொருளாதாரத்தில் குழப்பத்தை உண்டாகியுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு மத்தியில் ஒரு வர்த்தக போரை உருவாகியுள்ளது. இந்த நாடுகள் ஏட்டிக்கு போட்டியாக தத்தமது வரிகளையும் அமெரிக்கவுக்கு எதிராக அதிகரித்தாலும் இந்த விடயத்தில் இலங்கை போன்ற நாடுகள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளன. அதேநேரத்தில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியம் (EU) குறைந்த வருமானம் பெறும் இலங்கை போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை (GSP+) தொடர்பாக மீளாய்வு செய்துள்ளது. ஏனென்றால் இலங்கை போன்ற நடுத்தர வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நாடுகள் இந்த வரிச் சலுகையின் மூலம் கணிசமான அளவு அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்கின்றன. இந்நிலையில், இந்த வரிச் சலுகையும் இடைநிறுத்தப்பட்டால் ஏற்கனவே பாரிய கடன் சுமையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வி நியாயமானது.
GSP+ என்றால் என்ன?
Generalised Scheme / System of Preferences Plus (GSP+) என்பது, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மூலமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்புச் சலுகைவரிச்சலுகைத் திட்டமாகும். GSP சட்ட அடித்தளம் 1971ஆம் ஆண்டில் பொருள் வர்த்தக மற்றும் சுங்க இறக்குமதி ஒப்பந்தமான GATT (General Agreement on Tariffs and Trade) ஆவணத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது கைத்தொழில்துறைரீதியான நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையில் பரஸ்பரமான வர்த்தக சலுகைகள் வழங்க அனுமதித்தது. இந்த ஏற்பாடு 1979ஆம் ஆண்டில் "Enabling Clause" (சாத்தியமான விதி) என்பதனை ஏற்கின்ற முறையில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது, இதன் மூலம் இவ்வாறு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பன்னாட்டுக் வர்த்தக உடன்படிக்கைகளின் நிலையான அம்சமாக அனுமதிக்கப்பட்டது. GSP மூன்று முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. முதலாவது Standard (GSP) இது வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த சுங்க வரி வழங்கக்கூடிய சலுகையாகும். (GSP+) மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச தரத்தை திறம்படச் செயல்படுத்தும் நாடுகளுக்குக் கூடுதல் சுங்க வரிக் குறைப்புகளை வழங்கும் சிறப்பு சலுகையாகும். ஆயுதங்களைத் தவிர மற்ற அனைத்தும் (Everything But Arms - EBA): குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து (ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தவிர) அனைத்துத் தயாரிப்புகளுக்கும் முழுமையாக வரி இல்லாத மற்றும் ஒதுக்கீடு இல்லாத சந்தை அணுகலை வழங்குகிறது. இவ்வகையான GSP சலுகைகள் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளுடனும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடனும் சிறந்த முறையில் ஒன்றிணைவதற்கு பல திருத்தங்கங்களுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, ஒழுங்குமுறை (EU) எண் 978/2012 குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, இதில் மிகவும் தேவையுள்ள நாடுகள் மீதே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
கொள்கைகள் மீறல்கள் ஏற்படுகின்ற பட்சத்தில் முன்னுரிமைகளை கண்காணித்து, தற்காலிகமாக இந்த சலுகைகளை நீக்கும் வழிமுறைகள் உள்ளடைக்கியதாக காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக GSP+ என்பது, வளர்ந்து வரும் நாடுகளில் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி (Good Governance) ஆகியவற்றை ஊக்குவிக்க வழங்கப்படும் ஊக்கத்திட்டமாகும். இதற்காக, 27 சர்வதேச உடன்படிக்கைகள் மீது கையெழுத்திட்டு அதைப் பின்பற்ற வேண்டும். அவை மனித உரிமைகள், தொழிலாளி உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி என்ற நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன இந்த உடன்படிக்கைகளுக்கு ஏற்ப செயல்படும் நாடுகளுக்கு மட்டுமே இந்த சலுகைகள். இலங்கை, போலிவியா, கேப் வெர்டே, கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த சலுகைகளை பெற்றுவருகின்றன. தற்போது வழங்கப்படும் GSP+ திட்டம் 2027 வரை மட்டுமே செல்லுபடியாகும். 2027ஆம் ஆண்டுக்கு பிறகு, GSP+ தொடர வேண்டுமானால், இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக, முன்பே அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். இல்லையெனில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டபடி, மீளாய்வின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் மீறப்பட்டிருந்தால், இந்த சலுகை நிறுத்தப்படும்.
இலங்கைக்கும் GSP+ எப்படி வந்தது?
2004 சுனாமிக்குப் பிந்தைய காலகட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இலங்கை முதன்முதலில் 2005 இல் GSP+ அந்தஸ்தைப் பெற்றது. ஏனெனில் இது நாட்டின் மீட்கும் முயற்சிகளுக்கு ஊக்குவிக்குமுகமாக வழங்கப்பட்டது. ஆனால் உள்நாட்டுப் போரின் இறுதி கட்டங்களிலும் அதைத் தொடர்ந்த காலப்பகுதியிலும் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் காரணமாகக் 2010இல் இது இழக்கப்பட்டது. பின்னர், 2015இல் அமைந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்து அதாவது , கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை நிலைநிறுத்துவதற்கான புதிய உறுதிப்பாட்டிற்குப் பிறகு, இலங்கை 2017 இல் மீண்டும் GSP+ 2017இல் மீண்டும் இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டது. GSP+ சலுகை இலங்கை பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதி இலக்கு சந்தையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு சந்தையாக பரந்த ஐரோப்பிய ஒன்றிய சந்தை காணப்படுகிறது. அந்த வகையில் GSP+ என்பது இலங்கை ஏற்றுமதிக்கு பாரிய ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பம் இலங்கை தயாரிப்புககளை மேலும் போட்டிதனிமையாக்கின்றது. 2023 ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி தோராயமாக €2.6 பில்லியன் ஆக இருந்தது, இதில் கணிசமான பகுதி GSP+ சலுகைகளால் ஏட்பட்ட பயனாகும்.
இலங்கையில் சில முக்கிய துறைகள் இந்த GSP+ சலுகையில் இலாபம் ஈட்டுகின்றன. குறிப்பாக ஆடைத்தொழித்துறை, மீன்வளத் துறை, விவசாயப் பொருட்கள் முக்கியனமானவையாகும். இவற்றிலும் குறிப்பாக இலங்கை ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஒரு மூலக்கல்லாகும் ஆடைத் துறை காணப்படுகின்றது. ஆடைத்தொழில் தொழில் (Garment Industry) அதிகமான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டும் மற்றும் அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருப்பதால், இந்த சலுகை அவசியமாகின்றது. பல வகையான ஆடைகளுக்கு கணிசமான அளவு சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவதால், இலங்கையின் ஆடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை ஏற்றுமதி பெரும் பங்கைக் கொண்டுள்ளது (2020 இல் சுமார் 50%) மற்றும் நாட்டின் தொழில்துறை பணியாளர்களில் கணிசமான பகுதியினருக்கு வேலை வழங்குகிறது, இதில் அதிக சதவீத பெண்கள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர திறமையுள்ள தொழிலாளர்கள் உள்ளனர் (Fibre2Fashion, 2024; IPS, 2025). GSP+ இன் நன்மைகள் இத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கிறது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க பங்களிக்கிறது. அதே போல இலங்கையின் மீன்வளத் துறையின் புத்துயிர்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு GSP+ திட்டம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. கடல் உணவுகளுக்கான வரிகள் சுமார் 18.5% இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவதால், இலங்கையின் மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஐரோப்பிய சந்தையில் திறம்பட போட்டியிட முடிகிறது . இது ஏற்றுமதி அளவை அதிகரிகின்றது மற்றும் வணிக தொடர்புகளை மீட்டெடுக்க உதவுகிறது விவசாயப் பொருட்கள் நோக்குகின்ற போது மிக குறைந்தளவில் ஏற்றுமதி காணப்பட்டாலும் கூட GSP+ ரப்பர் பொருட்கள், தேயிலை, மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் பொருட்கள் உட்பட பல்வேறு விவசாயப் பொருட்களுக்கும் முன்னுரிமை அணுகலை வழங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் "சிலோன் இலவங்கப்பட்டை"க்கு புவியியல் குறியீடு (GI) அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தயாரிப்புத் திறனை உறுதி செய்வதன் மூலமும் விவசாயப் பொருட்களுக்கான தேவையை அதிகரிப்பதன் மூலமும் இத்துறையில் இலங்கையின் ஏற்றுமதி திறனை மேலும் பலப்படுத்துகிறது.
உடனடி வர்த்தக நன்மைகளுக்கு அப்பால், GSP+ நிலையான உள பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்கு உட்பட்ட நிபந்தனை, பொறுப்பான நடைமுறைகளை பின்பற்ற நாட்டை ஊக்குவிக்கிறது. இதில் சிறந்த பணி நிலைமைகளை ஊக்குவித்தல், வழக்கமான ஊதிய உயர்வுகளை உறுதி செய்தல் மற்றும் குறிப்பாக ஆடைத் துறைகளில் தொழிலாளர்களுக்கு ஆதரவு சேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன. இத்திட்டம் பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், சர்வதேச தரநிலைகளை மதிக்கும் ஒரு நாடு என்ற சமிக்ஞை மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கவும் பாரியளவு பங்களிக்கின்றது.
இலங்கையைப் போன்ற பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ (Generalised Scheme of Preferences Plus) சலுகை ஒரு அத்தியாவசியமான பாதுகாப்பு வலையாகச் செயல்படுகிறது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இது இலங்கையின் ஏற்றுமதித் துறையை உறுதிப்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கிறது. எனினும், இந்தச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது, குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களைக் கடைபிடிப்பதில். இலங்கை (Institute of Policy Studies - IPS) சமீபத்திய அறிக்கை, GSP+ சலுகையின் முக்கியத்துவத்தையும், அதை இழந்தால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஐரோப்பிய சந்தையில் இருந்து ஏற்றுமதித் தேவை குறைந்தால், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறையலாம். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், வெளிநாட்டு நாணய வருவாய்க்கும் பெரும் பதிப்பாக அமையும். இந்த இழப்பால் 73,574 வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் யாதெனில் பாதிக்கப்படுவோரில் 65.65% பெண்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் குறைந்த அல்லது நடுத்தர திறமைகளுடன் கூடிய தொழிலாளர்கள். இலங்கையின் ஏற்றுமதியில் ஆடைத் துறை ஒரு முக்கியப் பங்களிப்பாளர். GSP+ இல்லையென்றால், ஐரோப்பாவுக்குச் செய்யப்படும் ஆடைத் தொழில் ஏற்றுமதிக்கு 10% வரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி குறைவு, வேலை இழப்பு, வெளிநாட்டு நாணய இழப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும், இது சமூகப் பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்யும்.
ஏன் GSP+ இழக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது ?
GSP+ சலுகைகள் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிப்பதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகளில் மனித உரிமைகள் முதன்மையானவை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA): இலங்கையில் நடைமுறையில் உள்ள (PTA) குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இந்தச் சட்டம் தற்போதுள்ள நிலையில் தொடர முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய இலங்கை அரசாங்கம் PTA-ஐ நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ உறுதியளித்துள்ளது. 2027க்குள் GSP+ சலுகையைத் தொடர விரும்பினால், PTA தொடர்பான மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் PTA மூலம் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுவதை கடுமையாகக் கண்டிக்கிறார்கள், ஏனெனில் இது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 2017 இல் GSP+ மீண்டும் பெறப்பட்டபோது, PTA-ஐ மாற்றி புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இலங்கை உறுதியளித்தது. 10 வருடங்கள் கடந்தும் இந்த உறுதிமொழிகள் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், 2027 இல் இந்தச் சலுகை தொடரும் நம்பிக்கை குறைந்து வருகிறது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act): இலங்கையின் புதிய Online Safety Act குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டம், "தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்" எனக் கருதப்படும் இணைய உள்ளடக்கங்களை அரசாங்கம் அகற்றும் அதிகாரத்தை அளிக்கிறது. விமர்சகர்கள் இந்தச் சட்டம் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் புத்தாக்கங்களை பாதிக்கக்கூடியது என்று வாதிடுகின்றனர். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சேங் கூட இந்தச் சட்டத்தின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். GSP+ போன்ற வரிச்சலுகைகள் மனித உரிமை மீறல்கள் நடந்தால் இழக்கப்படும்.
தற்போது, GSP+ சலுகையைத் தொடர்வதற்கு இலங்கையின் நிலைமையை சரிபார்க்க ஒரு ஐரோப்பிய ஆய்வுக் குழு நாடு வந்துள்ளது. ஹர்ஷ டி சில்வா போன்ற நிபுணர்கள், GSP+ இழக்கும் அபாயம் குறைவாகவே உள்ளது என்றாலும், இலங்கை ஒரு புதிய திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு புதிய திட்டம் ஆரம்பிக்கும் வரை ஏற்படும் இடைவேளை ஒரு முக்கிய சவாலாக அமையும். PTA நீக்கப்படாமல் இருந்தால், 2027 இல் புதிய சலுகையைப் பெற முடியாமலும் போகலாம்.
GSP+ ஒரு நிரந்தரமான சலுகை அல்ல என்பது உண்மைதான். ஆனால், கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், இந்தச் சலுகை மிக அவசியமானது. தற்போதுள்ள நிலையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பும் முயற்சிக்கு GSP+ ஒரு பெரிய துணையாக இருக்கிறது.
அமெரிக்கா ஏற்கனவே ஒரு "சிவப்பு விளக்கை" காட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தால், இலங்கையின் வெளிநாட்டு நாணயம், வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்படலாம். இலங்கை இன்னும் மாற்றங்களைச் செய்ய நேரம் உள்ளது. ஆனால், நாம் உறுதியளித்த விஷயங்களில் முன்னேற்றம் காட்டவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியம் தனது எச்சரிக்கையை நிறைவேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. இலங்கை அதற்கு தகுந்த பொருளாதார அரசியல் கொள்கைகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில் இலங்கையின் எதிர் காலம் கேள்விக்குறியே!
ஆக்கம்: அபிஷாயினி கிரிஷாந்த்