இலங்கையின் பலவீனமான பொது நிதிகள் கொவிட்-19 இலிருந்தான பொருளாதார அதிர்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Sri Lanka’s weak public finances will exacerbate economic shocks from COVID-19

இலங்கையின் தளம்பும் பொது நிதியானது கொவிட்-19 இன் வீழ்ச்சி மூலம் மற்றொரு அடியைப் பெற உள்ளது. ஒரு தொற்றுநோயின் மிக முக்கியமான அம்சம் எப்போதும் மனித செலவாகவிருந்தபோதிலும் வைரஸின் பரவல் பொருளாதாரத்திற்கு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரம், போக்குவரத்து, விவசாய மற்றும் சுற்றுலாத் துறைகள் உட்பட பல வழிகள் மூலம் தொற்றுநோய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எல்லைகள் மூடப்பட்டு உலக சந்தைகள் மெதுவாக இருப்பதால்; வர்த்தகம் பாதிக்கப்படுகிறது, எனவே ஏற்றுமதிகள் பாதிக்கப்படுகின்றன.

இலங்கையின் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேலும் பாதிக்கப்படும், மேலும் சில முக்கிய ஏற்றுமதியாளர்களின் கட்டளைப் புத்தகங்கள் அடுத்த காலாண்டில் பாதிக்கப்படும். சர்வதேச விநியோகச் சங்கிலிகள் ஒப்பந்த ஏற்றுமதிகள் தடைப்பட்டிருப்பதால், சந்தைகள் கூறுகளாக மீண்டும் திறக்கப்படும் போதும், மூலப்பொருட்கள் குறுகிய விநியோகத்தில் இருக்கக்கூடும். இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாக்கமானது உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கூட பாதிக்கும். விவசாயமானது இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நடுகைப் பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள்  ஆகியவற்றில் தங்கியுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள், கூறுகள் மற்றும் உதிரிப்பாகங்களை வெளிநாடுகளிலிருந்து பெறுவதனால் மேலும் அவை முழு இயல்திறனில் வேலை செய்ய முடியாமல் போகலாம்.

காசுப் பாய்ச்சலானது நின்று போய், கடன்கள் அதிகரிக்கும் போது, ​​பல வணிகங்களால் அதனைச் சமாளிப்பது கடினம். 2008/10 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் போது, ​​உற்பத்தி நிறுவனங்களிடையே, குறிப்பாக ஆடைத் துறையில் ஆட்குறைப்பு காரணமாக 90,000 இலங்கையர்கள் வேலை இழந்தனர். தற்போதைய நெருக்கடியின் தாக்கம் அதைவிட மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிதி நெருக்கடியைப் போலன்றி, இந்த தொற்றுநோய் தாக்கம் முன்னேறிய நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. ஏற்றுமதி சந்தைகளின் இழப்பு காரணமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பாதிக்கப்பட்டன, ஆனால் அவற்றின் உள்நாட்டு சந்தைகள் பாதிக்கப்படவில்லை. இந்த தொற்று அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாதிக்கிறது. அன்றாட ஊதியம் பெறுபவர்கள் தங்களது ஏற்கனவே நிச்சயமற்ற வருமானங்கள் மேலும் குறைந்து போவதைக் காண்பார்கள். சிறு வியாபாராங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

இதன் பொருள் வளர்ச்சி மேலும் குறையும் என்பதாகும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையானது வருமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த செலவினங்கள் காரணமாக இரட்டிப்பாகும். குறைந்த அளவிலான செயல்பாடு என்பது வரிச் சேகரிப்பின் குறைந்த அளவைக் குறிக்கிறது. விற்பனை மற்றும் இறக்குமதி குறைந்து வருவதால், சேர்பெறுமதி வரி மற்றும் இறக்குமதி வரிச் சேகரிப்புக்கள் குறையும். வணிக இலாபங்கள் குறையும்போது, ​​வருமான வச் சேகரிப்பு குறையும். இதற்கிடையில், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்திற்கான சுகாதார செலவுகள் (சோதனை கருவிகள் முதல் மருத்துவமனை செலவுகள் வரை) மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகள் உயரும். இதனால் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை விரிவடையும் மற்றும் அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இலங்கையின் வட்டிப் பற்றுச்சீட்டு இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ .1 டிரில்லியன் ஆகும்.

பொது நிதி வலுவானதாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும், ஆனால் தொடங்குவதற்கு ஆரோக்கியமற்ற இலங்கையின் நிதி - சமீபத்திய வரி வெட்டுக்களால் பலவீனமடைந்தது. வீழ்ச்சியை மதிப்பிடுவது கடினம், ஆனால் கிடைக்கக்கூடிய கொள்கை விருப்பங்களை மதிப்பிடுவதற்கு முதன்மை சிக்கல்களை மறுபரிசீலனை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

இலங்கை 2016 ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வசதியைப் பெற்றது. இது 1950 ஆம் ஆண்டில் இந்த நிதியத்தில் இணைந்ததிலிருந்து இவ்வாறு பெற்ற 16 வது நிகழ்வாகும்- இது அடிப்படை சிக்கல்களின் முறையான மற்றும் நீண்டகால தன்மையைக் குறிக்கிறது. சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் "வரி வருவாயில் இரண்டு தசாப்த கால சரிவை மாற்றியமைத்தல் மற்றும் பொது நிதிகளை ஒரு நிலையான நடுத்தர கால கட்டத்தில் வைத்தல்" ஆகும். வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்க வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், எனவே அரசாங்கத்தின் கடன் (பற்றாக்குறைகள் குறையும்போது, ​​கடன் வாங்க வேண்டிய அவசியம் குறைகிறது) குறைகின்றது.

பிரபலமான கற்பனையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை: அரசாங்க செலவினங்களைக் குறைத்தல், இது சமூக மற்றும் நலச் செலவுகளை எதிர்மறையாக பாதிக்கிறது. செலவினக் குறைப்பு சமூக நலத்திட்டங்களைக் குறைத்து வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மூடுகிறது. முந்தைய ‘நல்லாட்சியின்’ கீழ், இலங்கை இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளை மேற்கொண்டது: பற்றாக்குறையை ஈடுகட்ட வரிகளை அதிகரித்தது. செலவினம் தீண்டப்படாமல் விடப்பட்டதால் உண்மையில், தொடர்ந்து அதிகரித்தது.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்க வருவாயின் பெரும்பகுதி நுகர்வு வரி குறிப்பாக சேர்பெறுமதி வரி வடிவத்தின் மூலம் வருகிறது, எனவே அதிகரித்த வரியின் சுமை பொது மக்கள் மீது எப்படியும் விழுந்தது, இது கடுமையான அதிருப்தியைத் தூண்டியது. வருமான வரியும் அதிகரிக்கப்பட்டது, வணிக சமூகத்தை கோபப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட தரப்பினரின் கோபத்திற்குள்ளாகி மற்றும் மிகவும் செல்வாக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொது நிதி ஓரளவு மேம்பட்டது, ஆனால் ஒருபோதும் வலுவடையவில்லை. 2019 ஏப்ரலில் நடந்த தாக்குதல்களால் விடயங்கள் மீண்டும் நழுவத் தொடங்கின. 2019 நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வானது "குறிப்பிடத்தக்க வருமானப் பற்றாக்குறையின் காரணமாக நிதி இலக்குகள் இனி அடைய முடியாது" என்று குறிப்பிட்டது.

2019 நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் டிசம்பரில் பெரும் வரி வெட்டுக்களை அறிவித்தது. வரி அதிகரிப்பின் செல்வாக்கற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விரக்திக்கு பதிலளிப்பது தவறு அல்ல, ஆனால் குறைப்புக்களின் விரிவானது வியக்க வைக்கிறது. பெருநிறுவன வருமான வரி 28% முதல் 24% வரை குறைக்கப்பட்டது, சேர்பெறுமதி வரியானது (VAT) 15% முதல் 8% வரை அரைவாசியாகக் குறைக்கப்பட்டது; நிறுத்தி வைத்தல் வரி, நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பொருளாதார சேவை கட்டணம் ஆகியன அகற்றப்பட்டன. சீர்குலைந்த பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சியளிப்பதே இதன் நோக்கமாகும், ஆனால் செலவானது - அரசாங்க வருவாயில் கால் பகுதி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-4% பொது நிதிகளை சீர்குலைத்தது.

2020 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று, சர்வதேச நாணய நிதியம்: “விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் (EFF) ஆதரிக்கப்படும் திட்டத்தின் கீழ் முதன்மை மிகை இலக்கானது பலவீனமான வருமான செயல்திறன் மற்றும் அதிகமான செலவினங்கள் காரணமாக  2019 ஆம் ஆண்டில் கணிசமான அளவு வித்தியாசத்தால் தவறவிடப்பட்டதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீத பற்றாக்குறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.” நிதியின் படி, இலங்கையின் 2020 வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9% ஆக உயரக்கூடும், இது 2015 இற்குப் பின்னரான மிக உயர்ந்த வீதமாகும். தொற்றுநோயைப் பொறுத்தவரை, இது நம்பிக்கையுடன் கூடியதாகும். 2019 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை 6.5% ஆக இருந்தது, ஆனால் நிதி அமைச்சின் கூற்றுப்படி, “2019 ஆம் ஆண்டிற்கான உண்மையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது 8 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்”, ஏனெனில் ரூபா .367 பில்லியன் செலவுகள் செலுத்தப்படாமலும், ஆண்டு முடிவில் கணக்கிடப்படாமலும் இருந்தன. 

இதற்கிடையில், தரப்படுத்தல் முகவராண்மைகள் ஃபிட்ச் (Fitch) மற்றும் எஸ் என்ட் பி (S&P) ஆகியன ‘நிலையானதாகவிருந்த’ இலங்கையின் கடன் பற்றிய கண்ணோட்டத்தை “எதிர்மறை” ஆகக் குறைத்தன. இலங்கையின் ஏற்கனவே தள்ளாடும் பொது நிதி இப்போது கொவிட்-19 இன் கூடுதலான பொருளாதார அதிர்ச்சியை சமாளிக்க வேண்டும். 

பொது சுகாதார அவசரநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித செலவு ஆகியவற்றைக் கையாள்வது கொள்கை வகுப்பாளர்களின் மனதில் இருக்க வேண்டும். ஆயினும்கூட தெளிவான பார்வை கொண்ட பொருளாதாரச் சிந்தனையானது சமமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், மேலும் குறிப்பாக நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மனித செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் ஒரு முடக்கம் அல்லது முழுமையான ஊரடங்கு உத்தரவின் ஒப்பீட்டு செலவுகளை எடைபோடுவது முக்கியம்.

அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலி வெளிநாட்டுக் கடனை நிர்வகிப்பதாகும். மத்திய வங்கியின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நடுத்தர கால கடன் மூலோபாயம் இனி இருக்காது என்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது - நடுத்தர காலத்திற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி, 5 சதவீத பணவீக்கம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பறறாக்குறை 3.5 சதவீதம். நடுத்தர கால மூலோபாயம் சிதைவடையும் நிலையில், முதிர்ச்சியடைந்த கடனை அரசாங்கத்தால் நீடிக்க முடியுமா?

2020 பெப்ரவரியில் மொத்த ஒதுக்கங்கள் 4.6 மாத இறக்குமதிக்கு சமமான 7.9 பில்லியன் அமெரிக்க டொலரர்களாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் வெளி கடன் திருப்பிச் செலுத்துதல் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது சீனாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனால் பகுதியளவில் மீள்நிதியளிக்கப்பட்டுள்ளது, இது மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது . குறைந்தபட்சம் மூன்று மாத இறக்குமதியைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்த ஆண்டின் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால் குறைந்தபட்சம் 2-2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட நாடு எதிர்பார்க்கிறது.

அதன் பொது நிதி ஒழுங்கீனங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம் புரண்டதுடன் தவிர்க்க முடியாத கடன் தரமிறக்குதல் காரணமாக, கடன் வாங்க சந்தைக்கு திரும்புவது சாத்தியமில்லையென தரப்படுத்தல் முகவராண்மைகளினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாண்டு முதிர்ச்சியடையும் இலங்கையின் இறையாண்மை பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இதை எழுதும் நேரத்தில், முதலீட்டாளர்கள் தற்போதைய வருமானத்தில் 101 சதவிகித அதிகரிப்பினைக் கேட்கிறார்கள், அடுத்த ஆண்டு முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 44% ஆகும். ஒரு புதிய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் சந்தைகளுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும், ஆனால் இது வலிமிகுந்த இறுக்கத்திற்கு திரும்புவதைக் குறிக்கும். மேலும் பிணை எடுப்புகளுக்கு மேல்முறையீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமான தெரிவாகும்.

கடன் நிவாரணம் கோரிய நாடுகளில் இலங்கையும் உள்ளது. இந்த அழைப்புக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியன ஆதரவு அளித்துள்ளன. இந்த அழைப்பு ஏழ்மையான நாடுகளுக்கானது என்றாலும், இந்த அமைப்புகள் சமீபத்தில் இலங்கை போன்ற உயர் நடுத்தர வருமான வகையாக மாற்றப்பட்ட நாடுகளை பரிசீலிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சில விமர்சகர்கள் அரசாங்கம் எளிதாக மீளச்செலுத்தாதிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இது எளிதாகத் தோன்றினாலும், வணிகக் கடனை மறுசீரமைப்பது கூட ஆபத்தானதாகும்: திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைப்பது அல்லது குறைப்பது சந்தைகளால் திருப்பிச்செலுத்தத் தவறும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது, அதாவது சிறிது காலத்திற்கு சந்தைகளுக்குத் திரும்புவது கடினமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, முதலீடு மற்றும் தனியார் துறை கடன் பொதுவானதாக இருப்பதால் இது பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. இது வங்கி தோல்விக்கு வழிவகுத்து நிதித் துறை பாதிக்கப்படலாம்.

1998-2000 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், ஈக்வடோர் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பின் விளைவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு 2002 இனால்  காட்டப்பட்டது:

"உண்மையான வருமானம் மற்றும் நிதியுதவியின் வீழ்ச்சி உள்நாட்டுக் கேள்விக்குப் பரவியது. நம்பிக்கை சரிந்ததுடன் தனியார் முதலீடு கடுமையாக குறைக்கப்பட்டது. தனியார் நுகர்வில் ஒரு பின்னடைவுடன் இருந்தாலும், சிறிது காலத்திற்கு குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தை மீளப்பெற்றன. பொது நிதிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் பொது நுகர்வு குறைக்கப்பட்டது. பரிமாற்றக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மூலதன உள்ளீடுகள் குறைந்ததன் விளைவாக வெளிநாட்டு நிதிகளின் பற்றாக்குறையை பிரதிபலிக்கும் மாற்று விகிதங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுக் கேள்வி குறைந்தமை மற்றும் இறக்குமதிப் பிரதியீடு ஆகியன நடைமுறைக் கணக்குகளை மேம்படுத்த உதவின. நாணய மாற்றுத் தேய்மானம் விலைகளுக்கு விரைவாகச் சென்று பணவீக்கம் அதிகரித்தது. ஊதியங்கள் குறைவடைந்துள்ளதுடன், பணவீக்கம் வைப்புகளின் பெறுமதியை அழித்துவிட்டது, வேலையின்மை அதிகரித்ததுடன் குடும்பங்கள் கணிசமான உண்மையான வருமான இழப்புகளை சந்தித்தன. ”

இலங்கை இவ்வாறு திறமையாகக் கையாளுவதற்கு வாய்ப்புக்கள் குறைந்த  ஒரு தந்திரமான நிலையில் தன்னைக் காண்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு கொவிட்-19 மட்டும் காரணமிட்டாவிட்டாலும் இது விடயங்களை மிகவும் மோசமாக்கியுள்ளது. தொற்றுநோய் பல தசாப்தங்களாக வளர்ந்து வரும் கொள்கை பலவீனங்களை ஒரே நேரத்தில் வளர்ச்சி, நிதி மற்றும் வெளித் துறைகளை உள்ளடக்கிய ஒரே மாபெரும் அதிர்ச்சியாக மாற்றிவிட்டது.

சர்வதேச மூலதன சந்தைகளுக்கான அணுகல் ஒப்பீட்டளவில் குறுகிய வரலாற்றைப் பின்பற்றி, உள்நாட்டு கொள்கை குறைபாடுகள் மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளாகிய: ஆசிய நெருக்கடிக்குப் பின்னரான சாதகமற்ற வெளிப்புற சூழலுக்கு மேலதிகமான ரஷ்யா மற்றும் ஈக்வடோர் நாடுகளுக்கான பலவீனமான எண்ணெய் விலைகள், அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான  சர்வதேச தடைகள், ஈக்வடோரிற்கான எல்-நினோ விளைவு, உக்ரேனுக்கான ரஷ்யாவின் கொந்தளிப்பு ஆகியவற்றினால் பேரினப் பொருளாதார நிலைமை ஸ்திரமின்மைக்கு உட்பட்டமையும்  மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வின் ஒரு  விடயமாக இருந்தது

குறுகிய காலத்தில்  பிணை எடுப்புக்கள் அவசியமாக இருக்கும், ஆனால் இது பிரச்சினைகளை பின்னர் மிக தொலைவிலுள்ள திகதியன்றுக்கு ஒத்திவைக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமேயாகும். கொவிட்-19 நெருக்கடியின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவிலிருந்து மேலும் இரு-பக்கக் கடன்கள் சாத்தியமாக இருக்கும்போது, ​​மேலும் இரு-பக்க உதவி ஒரு யதார்த்தமான விருப்பமாக இருக்காது. இது 1 டிரில்லியன் டொலர் கடன்பெறும்  இயல்திறனுடன், ஒரு சர்வதேச நாணய நிதியத் திட்டமானது மேலும் கடன் பெறுவதற்கான ஒரே யதார்த்தமான தெரிவினை வழங்குகிறது.

மறுதலிக்கும் நிலையில் வாழ்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் கடுமையான யதார்த்தங்களை எழுப்ப வேண்டும். தேர்தலுக்கு முந்தைய துணிச்சலும் நீண்டகாலமாக நிலவிய சதித்திட்டக் கோட்பாடுகளும் உலகளாவிய நிதி நிறுவனங்களுடனான நடுநிலையான சிந்தனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக களைந்தெறியப்பட வேண்டும். ஒரு பங்கினை வகிப்பதற்கு வலுவூட்டப்பட்ட அனைத்து சட்டரீதியான நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து பொருளாதார முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட் வேண்டும்.

தவறுகள் செலவு மிக்கவையானதுடன் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கடுமையான பொது சுகாதார நெருக்கடியிலிருந்து பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியாக மாற்றும் அபாயத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.